நம்மால் முடியுமென்பதும் முடியாதென்பதுவும்,
நாமறியா பகல் கனவென்ற நம்பிக்கையே.
முடிந்ததெல்லாம் நன்மையாய் முடியவில்லை,
முடியாமல் போனதெல்லாம் தீதாயும் ஆகவில்லை.
உறவுகள் பிரிவெழுதின் நம்பிக்கை துரோகமென்போம்,
காலங்கள் கடந்துபோனால் இயற்கையதுவிதிவெனபோம்.
கைவிரல் ஐந்தும் சேர்ந்திருந்தால் பிரிக்க வழி பார்ப்போம்,
தனித்தனியாய் இணைந்திருந்தால் அழகு என்றுரைப்போம்.
வயதில்லா மழலையின் வார்த்தை தேனிசையாய்,
வாலிபத்தின் மொழியெல்லாம் மயக்கும் கனிமொழியாய்,
வசந்தகால நினைவெல்லாம் நிகழ்கால தாலாட்டாய்,
நாளைய வாழ்வெல்லாம் இன்றய கனவுகளாய்!
கணக்கில் பிழையேதும் இருப்பதாயத் தெரியவில்லை,
நம்கணக்கு சரியில்லை இதுவே யதார்த்தமென்று,
அறிந்தவன் சிரித்துக் கொடுத்து வாழ்கின்றான்,
புரியாதோர் புன்னகைத் தொலைத்து மாய்கின்றார்!
சிறகுகள் பறக்கத்தான் காற்றுள்ள எல்கைவரை,
சிந்தனையும் அப்படித்தான் நினைவுள்ள காலம்வரை,
அழுகையும் சிரிப்பும் யார்சொல்லி வந்ததென,
அறிந்தவர் யாருமில்லை நினைப்பதில் லாபமில்லை.
வாழ்கின்ற காலங்கள் கடுகளவு கூட இல்லை,
வானத்தில் பறந்தாலும் நிம்மதி இல்லையெனில்,
பிறந்ததில் பயனில்லை வாழ்விலும் பொருளில்லை,
அனைத்துமே அன்புதான் அதன்வழி நிம்மதியே,
ஆதலால் அன்பு செய்து மனங்கள் வென்றிடுவோம்!
படம் உதவி கூகிள் நன்றி கூகுளுக்கு .