தென்றலில் எழுதத் தொடங்கி இன்றோடு ஒரு வயதாகிறது தென்றலுக்கு....
வாழ்த்துக்களால் வளர்கிறேன்.......வணங்கித் தொடர்கின்றேன் .
தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி,
நடக்கப் பழகிய தென்றலின்று,
இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
பயணம்தொடர விரும்புகிறேன்!
இந்தியராய்ப் பிறப்பதென்பது,
இனிமையான ஓர் வரனென்பேன்,
அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
தரணியில் பெரும் பேரென்பேன்!
இமயம்முதல் குமரிவரை,
இதயங்கள் வாழ்ந்திருக்கும்,
சொர்கபுரி பார்க்கின்றேன்-அதில்,
நானுமொரு பாத்திரமாய்,
உடன் வாழ வரம் பெற்றேன்.
மனம் பாடும் பாட்டு இதுவே !
என்னினிய உறவெல்லாம்,
எனதருமை நட்புகளே!
எதுவும் கொடுக்க என்னிடமில்லை,
எதையும் நீங்கள் கேட்பதுமில்லை,
அள்ளி,அள்ளித் தந்த அன்பை,
இதயத்தில் வைத்து வணங்குகிறேன்!
ஆராதனைப் பொருளாக-அதை,
ஆராதிப்பேன் உயிருள்ளவரை!
நேற்றுவரைப் பிறை நிலவு,
இன்று வளர் பிறையாய்!
பௌர்ணமியாய் வளர்கவென,
வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
பாதம் தொழுது வளர்கின்றேன்,
பயணத்தைத் தொடர்கின்றேன்!
உங்களில் நானுமாகி!!
மீன்குஞ்சாய் கடலில் நீந்தி,
விண்மீனாய் வானில்பறந்து,
கார்முகிலாய் கவிதைபாடி,
காற்றாகி ,தென்றலாகி,
ஊற்றாகி தாகம் தீர்த்து
இந்தியத்தாயின் மடியினலே,
தமிழாய் மடியவேண்டும்.
அழைப்பு வரும்வரையில்,
எழுதும் என் எழுதுகோல்!
நீதிக்காய்-அநீதியெதிர்த்து!
தமிழுக்காய்-குரலை உயர்த்தி,
அன்புக்காய்-தலைவணங்கி,
உண்மைக்காய்-போராடி,
அறிவுக்காய்-அறியாமைஅகற்றி,
நட்புக்காய் -விட்டுக்கொடுத்து,
ஆத்மாவுக்காய்-ஆறுதல்பாடி,
இல்லார்காய்-நாழும் அழுது,
தொடரும் பயணமதை!
உங்கள் வாழ்த்தோடு!தொடர்கிறேன் முடிந்தமட்டில் ...
திக்குத் தெரியாமல்; வாய்ப்புகளுக்காய் தட்ட வேண்டிய வாசல் புரியாமல் ஓடி மாய்ந்து ஆயரமாயிரம் எழுத்தாளர்கள் அலைந்து திரிகையிலே ,வழிகாட்டியாய் வந்த வசந்த மண்டபம் திரு .மகேந்திரன் அண்ணா அவர்களுக்கும், வயதில் முதிர்ந்தவர் என்றாலும் மரபுக் கவிதைகளால் என்றும் இளமையாய் தென்றலுக்கு புயலென பெயரிட்டு மகிழும் புலவர் ஐயா அவர்களின் ஆசியுடனுடனும் ,வலைச்சரத்தில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய திரு . மதுமதி அவர்களுக்கும் ,மற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் ,ஆசிரியராக அமர்த்தி மகிழ்ந்த வணக்கத்திற்குரிய சீனா ஐயா அவர்களுக்கும் ,முதன் முதலாக எனது பதிவிற்கு வருகை தந்தும் தொடர்ந்தும் வழிநடத்தும் ரமணி ஐயா அவர்களுக்கும் ,தொடர்ந்து எனது பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துக்களால் எனை ஊக்கப் படுத்தும் சக தோழமைகளுக்கும் மீண்டும் மீண்டும் பல முறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து தொடர்கிறேன் . இனிப்பு எடுத்துங்க உறவுகளே...
கவிதை மீள் பதிவு