Wednesday 29 October 2014

முத்துக்கள் மூன்று ! (2)

விழியிருந்தும்   வையத்தில் வீணாக வாழ
வழியிருந்தும்  தேடாதார் தேவயை- பேச
மொழியிருக்க மௌனமே மாலையாக வாழ்வில்
பொலிவிழந்து போகும் அறி.



அஞ்சல்  குணமோ அழகுப் பதுமையோ
தஞ்சமெனக் கொஞ்ச தயக்கமோ- பேதையை
கள்ளென போந்தும்  கயவர் தமக்கோ
உளிகல்லோ பெண்மை உலகு.

கண்ணென பேசியே காரியத்தை சாதித்து
மண்ணென தூற்ற செழிக்குமோ வையத்தில்
பெண்ணென்ற ஓரினமே பேரிடறை தாங்கிடவோ
மண்ணாகும் மாந்தர்  உலகு.

Monday 27 October 2014

தமிழ்ச்சாரல் !


கண்ணழகு ராதையை கட்டியணைக்க தோனுதடி
பெண்ணழகு பேதையினால் பேராசை கூடுதடி
உன்னழகு ஓவியமே உருகுலையச் செய்குதடி
என்னழகு எதுவென்பேன் எழிலாளை கண்டபின்னே .


மொண்டுவிடத் தோனுதடி முத்தழகுத் தமிழை
கண்டுவிட்ட பின்னே கற்கண்டாய் ஆனதடி
தொன்றுதொட்டு வரும் மரபை நாளும்
வென்றுவிட களியாட்டம் போடும் மனமே.

காலைச் சோலையிலே கன்கவர் வித்தாக
மாலைக் காட்சியிலோ மயக்கிடும் மானாக
சேலைப் பூவிலும் சேர்ந்திடுமே உன்வாசம்
ஆலைக் கரும்பாக ஆனதடி என்னுள்ளம்.

Saturday 25 October 2014

நேசக்கோர்வை !

கோபத்தின் உச்சம் எதுவென்று
கேட்பாய்...
ஊடலுக்கும் கூடலுக்குமான
தொடர்பரியாதவனா நீ..

நாணத்தின் நளினத்தை
ருசிக்கத் தெரிந்தவன் நீ..


நூலிழைப் பிரிவையும்
நேசமெனும் ஊசியால்
கோர்க்கத்தெரிந்தவன் நீ..

நூதனத் திருடனே காதலின்
நுணுக்கத்தை கற்றவனே
என்னிடத்தில் உன் அடமும்
அழிச்சாட்டியமும்..
சிறுபிள்ளையின் பிரியமாகிப்போனது.



Wednesday 15 October 2014

தினம் பாடும் பாட்டு !

 
கண்ணழகு கருத்த மச்சான்
காதலிலே கரைய வச்சான்.
காத்து வாங்க நானும் போனேன்
பூங்காத்தா அவனே தொடர்ந்து வந்தான்.
வாசமுல்ல மணக்கவில்ல
வாடக்காத்தும் வீசவில்ல..
காலநேரம் விளங்கவில்ல
காலும் போக திசையுமில்ல..
உண்ண உணவும் எடுக்கவில்ல
ஊரில் உலவும் வசவுத்தொல்ல..
படுத்தா நாளும் தூக்கமில்ல
படுற பாடும்  கொஞ்சமில்ல

சேதி சொல்ல யாருமில்ல
சேம நலம் கூடுதில்ல...
தினம் படும் பாட்ட நானும்
மனமுழுக்க எழுதி வச்சேன்.

மனமிருந்தா வந்திடுவான்
மணக்க மணக்க படிச்சிடுவான்.

Sunday 5 October 2014

முத்துக்கள் மூன்று !

மாய மகிமையோ மாதேவன் மைந்தனோ
நேயக் கரம்நீட்டி நீயணைப்பாய் - தூமணியே
காயப் பெருந்துயர் கானலாய் போகிட
தூய கணபதியே காப்பு.

 தேனே கரும்பே தெவிட்டாத கற்கண்டே
ஊனே உருகுதடி உன்னெழிலாள் -சிட்டாய்
பறக்குதடி உள்ளம் கவிதொடுக்க மொட்டாய்
துறக்குமடி பூவும் களித்து.


உன்னை நினைத்தே துடிக்கும் இதயத்தால்
தன்னை மறந்ததே மாயமோ ?- என்றென்றும்
என்னில் இருக்க நலமும் செழிக்குமே
அன்னையே நீயே துணை.

Friday 3 October 2014

மீதமாக..

 
எண்ணக்கலவையில்
விழுந்த எறும்பாக...
எம்பி எம்பி தவித்து
மீளமுடியா ஞாபக
தீவுக்குள்ளேயே தள்ளப்படுகிறேன்.
இரவெது பகலெது
அறியமுடியா...
அமானுஷ்யம்.
பசிக்குணவாக
பார்வையையும்.
தனிமைக்குணையாக
நினைவையையும்
மட்டுமே பருகிப் பருகி
காத்திருக்கிறேன்.
பார்வையாளனே பகிர்ந்ததும்
புரிந்ததும் போக
மீதமுள்ள காதலை  மட்டும்
ஏன் விட்டு வைத்திருக்கிறாய்.?

Tuesday 23 September 2014

பகிர்ந்து மகிழ்தல் ...!

வணக்கம் உறவுகளே நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் விருதுடன் எனை வரவேற்கும் அன்பான உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு இந்த விருது பெற்றவர்களின் விதிமுறையின் படி...

இந்த விருதை எனக்கு  கொடுத்து மகிழ்வித்தவர்கள்

 1. தளிர் சுரேஷ்
2.. அவர்கள் உண்மைகள் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி.

முதலில் பகிர்ந்து மகிழ்தல்

1. இ.சே. இராமன்
2. தமிழ்ச்செல்வி
3. விமலன்

 இன்னும் என் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் என்பதில் சந்தேகம் இல்லையென்றாலும் இவர்கள் தொடர ஐந்து பேர் தேடும் போது சிரமமாக இருக்கும் என்பதால் இவர்களோடு ..... இவர்கள் அன்போடு நான் பகிர்ந்த விருதை பெற்று மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு.

என்னைப்பற்றி
 என் பெயர் சசிகலா.  பிறந்த ஊர் வந்தவாசி பக்கத்தில் அம்மையப்பட்டு. தாயாள் உலகுக்கு அறிமுகமானவள் தமிழாள் உங்களின் அன்பை பெற்றவள். எழுதுவதும் படிப்பதும் இயற்கையை ரசிப்பதும் மிகவும் பிடித்தது.   எனக்கு பிடித்த இவற்றையெல்லாம் ரசிக்க தடை சொல்லாத கணவரை மிகவும் பிடிக்கும். பிறகென்ன என் செல்லப் பிள்ளைகளை பிடிக்கும். எல்லாமே பிடிக்கும் பிடிக்கும் என்று மட்டும் சொல்கிறேனே என்று கேட்பது புரிகிறது. எனக்கு பிடிக்காதது என் கோபம். (அது எப்பவாவது தான் வரும்... ) இனி வராம இருக்க பார்க்கனும். சரிங்க அன்பால் இணைவோம். அன்பாய் இருப்போம். மகிழ்ச்சி...

Sunday 14 September 2014

நீ யாரோ ?

தேடலின் ஆரம்பமும் நீ
தேக்கத்தின் தொடக்கமும் நீ
உள்ளிருந்து உணர்த்துகிறாய்
உயிரோட்டத்தை நிகழ்த்துகிறாய்..
ஆரம்பமும் முடிவுமில்லா
வானலாவிய இருப்பும் நீ.
ஓட ஓட விரட்டுகின்றாய்
ஓரிடத்தில் நிறுத்துகின்றாய்.
நீயில்லா இடத்தினிலே
நின்று போகும் எல்லாமங்கே..
நிம்மதி என்ற பெருமூச்சை
வழங்குகின்ற வள்ளல் நீ..
அறிவுசார் ஜீவனல்லாது
 அனைத்திலுமே நிறைந்திருக்கும்
நீ யாரோ ?

Thursday 11 September 2014

ஒரு பார்வை ...!

கேட்கவும் சொல்லவுமான
எண்ணற்ற முனகல்களில்
முடங்கிப்போன மௌனங்கள்...
மொழிபெயர்ப்பின் பரிதவிப்பில்
உறங்கிக்கிடக்கும் காதல்...
கடந்து போகும் நேரமெலாம்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறேன்.
கட்டிவைத்தாவது கொட்டிவிடவேண்டும்
என்றேனும் காதல் சினுங்கள்களை...
அச்சமென்று ஏதுமில்லை
அழிச்சாட்டியத்தின் அலங்காரத்தில்
மழுங்கிப்போன நேசம்
புதுபிக்கும் முயற்சிவேண்டாம்..
அடையாளத்திற்கேனும் அவ்வப்போது
ஒரு பார்வை ...
இல்லையாங்கு கேள்வியாவோம்
தமிழ்க் காதலின் முன்பு...!

Thursday 26 June 2014

நினைவூஞ்சல் !


பந்தியில முந்தி வச்சா
பார்வை பட்டு போகுமுன்னே..
முந்தியில முடிஞ்சிவைச்சேன்
முத்தான கவிதை ஒன்னு...
முன்வரிசை ராகத்தில
முத்தழகன் பேரினிக்கும்

பின்ன வரும் பல்லவியில்
பிரசேதி சொல்ல வரும்...
கட்டழகு ஆசமச்சான்
கருத்தழகு மீசமச்சான்....
கன்னக்குழி தேசத்தில-என்
கண்ணிமைய பூட்டிவச்சான்..

அவனோ
காத்தோட சேதி சொல்ல
காதோரம் உரசி நிக்கும்...
பார்த்து பேசி பழகிடத்தான்
பருவ மக(ன்) நெனப்பினிக்கும்.

Friday 20 June 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

தோழி தேன்மதுரத் தமிழ் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள்.
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
அது வரை இருக்கமாட்டேன். இருந்தால் அப்போதாவது உறவுகளோடு கொண்டாடுவேன்.

(இது வரை அப்படி ஒரு நாள் வருவதே தொிவதில்லை இதில் இல்லாத போது பிறந்த நாளாம் ?)

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
என் தந்தையைப்போல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
எனது இரண்டாவது மகன் செய்த சேட்டைக்காக...

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
அதுவும் நன்றாகத்தான் இருக்கிறதே.. என்று மின்சாரம் இல்லாத போது மக்கள் எப்படி இருந்தாா்கள் என்று பிள்ளைகளுக்கு சொல்வேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
எப்போதும் ஒருவா்க்கு ஒருவா் விட்டுக்கொடுத்து அன்பாய் வாழ்வதே வாழ்வென்பதை சொல்வேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
வறுமை என்பதை ஒழிக்க வேண்டும் அது தானே ஒழியாது ஆதலால் அவரவா் தேவையை அவரவரே தேட வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
கணவரிடம் பிறகு அக்காவிடம்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
அதுவும் கடந்து போகும்..


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
பட்டினத்தாா் பாடல் சொல்வேன்.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
சாண்டில்யன் நாவல் படிப்பது , பாடல் கேட்பது.

Thursday 19 June 2014

எங்கோடி நான் தேட.....

தொட்டிலிட்ட கனவுந்தான்
தூங்கத்தான் மறுக்குதடி...

எச்சமிட்ட கன்னத்தை
எட்டி எட்டி பார்க்குதடி...

முந்தாணைய பிடிச்சிகிட்டு
முன்னும் பின்னும் ஓடுதடி...

எப்பத்தான் மடிதருவ
ஏக்கமுடன் கேக்குதடி...

கைக்குள்ள ரேகையாட்டம்
பத்திடுச்சே மருதாணியாட்டம்..

ஆடுபுலி ஆட்டத்துக்கோ
ஆள் சேர்க்கும் தோழியாட்டம்...

நிறைகுடமா நித்திரையில்
நிதமிருக்கும் அடுக்களையில்...

பச்சரிசி பல்லாட்டம்
பருவ மக நெனப்பிருக்க..

எங்கோடி நான் தேட
என்னுள்ளே கலந்தவள..

Thursday 10 April 2014

முந்தி ஓடும் சனத்தப்பாரு !


ஆளுக்கொரு கட்சிக்கொடி
ஆரவார பேச்சு கேட்டுக்கோடி
முந்தி ஓடும் சனத்தப்பாரு
முழக்கமிடும் கோசத்தக்கேளு
முன்ன பின்ன சாடிகிட்டு
முகத்த நல்லா கோணிக்கிட்டு
கூட கும்பிடு போட்டுகிட்டு
கூட போகும் (ஆட்டு)மந்தையப்பாரு...
வெட்டத் துளிர்க்கும் முருங்கையாட்டம்
வேட்டிக் கரைக்கொரு கட்சியாட்டம்
கூலி கொடுத்து தலைக்குந்தான்
கூட்டம் சேர்க்கும் நாளுந்தான்
புத்தம் புதுசா வண்ணம்தான்
புதுசா உடுத்தும் குட்டிச் சுவருந்தான்.
உன்னை என்னை யார் கேட்பா ?
உண்மை ஓட்டு யார் போட்டா ?
வெள்ளிக்காசு சிரிக்குமிடம்
வெளுத்து வாங்கும் கள்ள ஓட்டுகளும்..
தோத்தவரும் ஜெயித்தவரும்
தோரணமிடும் வசவுகளும்..
என்னாளும் இது வாடிக்கைதான்
நமக்கென்ன அங்க வேடிக்கைதான்..
வேளை முடிஞ்சி போச்சிதின்னா
வேலி போட்டு போயிடுவார்...
நமக்கு என்றும்
கூலி வேல தான் மிச்சமடி...
கூடக்கும்பிடு வேண்டாமடி.

Friday 4 April 2014

இரண்டது ஒன்றானால் !



ஒற்றைக்காலில் உடல் சுமக்கும்
கொக்காகுமோ மனித இனம்.

சாலையோர மணல் தனிலே
காத்து நிற்கும் சுமை தாங்கி
ஓடியோடி சுமை சுமந்திடுமோ ?

சக்கரம் பூட்டி அச்சாணியேந்தி
சுழலுகின்ற வண்டிச் சக்கரம் காண்
இரண்டானால் அது சுமக்கும்.

உறவில் உறவும் இப்படியே
இரண்டு ஒன்றானாலது மணம்.

இரண்டது நாலானால் குடும்பம்.
நாலது எட்டானால் சமூகம்.
எட்டது விரிந்து பரந்தால் நாடு.

தனித்தனியாயோடி வெலல்
கூடாது இவ்வுலகில்..
நாம் கூடி இணைந்து வாழின் நல்வாழ்வு.

கூடி எவரும் தோற்றதில்லை
இதை மறந்தவர் வென்றதில்லை
வென்றவர் நட்பு மறப்பதில்லை.

Wednesday 2 April 2014

நிலா வரும் நேரத்தில்...

நிலவதனை பார்த்திருந்தே நில்யென்றே சொல்லிவர
களவதனை கற்றநிலா நில்லாமல் போகவர
நிழலுனக்கு ஏன்எதற்கு நீதிருடி தானெக்கு
கழன்றோடி போகுமுந்தன் களவாணி புத்தியெதற்கு ?
ஜன்னலோரு இருக்கையில ஜதிசேரும் நேரத்தில
சல்லடையாய் எனை அரித்து சாந்தமாகும் சாமத்தில
மேகத்தில் தினம் ஓடி தேகத்தை தான் மறைக்கும்-கவி
மோகத்தில் நானழைக்க கோபத்தில் தான் முறைக்கும்.

முகங்காட்டா மூடுபனி முடிவேது எனக்கு இனி
முகவரியாய் வானமினி பிறைநிலவே வந்திடு நீ.
மலைதேடி மறைகின்றாய் மனம் தேடும் நந்தவனம்
மாலை வருவாய் என்றே மருகி நிக்கும் மங்கை தினம்.

Friday 28 March 2014

மானும் மயிலும் !

கொத்தோட பூ பறிச்சி
கொண்டையில   தான் சொருகி..
கொல்லப்புறம் போயிருந்தேன்
கொடுக்காபுளி  பறிக்க...
பின்னாடி நிழல்வரவே
முன்னோடிப்போக துணிந்தேன்
என்னாடி கண்ணேயென
சொல்லாடி வந்தவனால்..
எங்கோடிப்போச்சுதடி
என் கோபம்...
தள்ளாடி நிக்குதடி காலும்.
அறுத்துப் போட்ட
கோழியாட்டம்..
அல்லாடுறேன் நானே...
அவனோ தப்புத்தாளம்
போட்டுக்கிட்டு..
துள்ளி ஓடுறான் மானா..
தொரத்தி வந்த
புள்ளி மானை
தொலைதூரம்
காணலையே...?
தொக்கி நிக்கும்
என் உசிரும்
பிழைச்சிடுமா ?
தோணலையே ?

Monday 24 March 2014

வனப்புமிகு வடசேரி (தொடர் பதிவு)

வணக்கம் உறவுகளே அனைவரும் நலம் தானே ? தொலைதூர பயணித்தின் நடுவே கடிதப்போக்குவரத்தாக ஆகிவிட்டதா ? தென்றலின் வருகையும். என்ன செய்ய ? சரி விடுங்க. இனி அடிக்கடி தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். இப்போது திடீரென அனைவரையும் இங்கழைத்து நலம் விசாரிக்கும் ஆவல் வந்தது. ஆனால் சும்மா யாரும் அழைச்சா வருவாங்களா ? ஆதலால் ஒரு தொடர்பதிவு. யாரும் திட்டாம... தேடிவந்து அடிக்காம சமத்தா எழுதுவிங்களாம் சரியா ? பொதுவா எல்லோரும் பிறந்த ஊர் பற்றி தான் பெருமையா பேசுவாங்க.. நாம் புகுந்த வீட்டு (ஊர்) பெருமையை பேசுவோம் வாங்க...



காடுகர தோப்பெங்கும் கானக்குயில் பாட்டுசத்தம்
கேட்டுதினம் மதிமயங்கி நடனமிடும் மயிலுநித்தம்
அரவமிடும் ஓட்டத்திலே சலசலக்கும் சருகுகளும்
ஆரவாரம் கேட்டுவரும் கலகலன்னு குருவிகளும்.


மா-பலா வாழையோடு மருகிநிக்கும் தேனினமும்
மாங்கனியில் உள்நுழைந்து மயங்குதங்கே வண்டினமும்
காலைநிறக் கதிரவனின் காட்சியங்கே ஓவியமே
மாலை வரக்காத்திருக்கும் அந்தியொரு காவியமே.
வண்டிமாடு சலங்கையொலி வழிவகுக்கும் பாதையுந்தான்
வாஞ்சையோடு உடனடந்து வயலுழவும் காளைமாடுந்தான்
நடவுப்பாட்டில் நாட்டு நடப்பு நாவசைய இசையுடனே
நாட்டாமையில் நீதி நேர்மை வாழ்ந்திடுதே பாங்குடனே.

அய்யனார் குளமழகு அரளிப்பூ சிரிப்பழகு
அடுக்கடுக்கா படியழகு அதனோரம் பனையழகு
ஊர்க்காக்கும் காளியம்மா உள்ளிருக்கும் காமாட்சி
உடனுறை நீராட்டில் அரசமரத்தான் அருளாட்சி.
கம்மாயில் நீரோடி கழனியெல்லாம் பாய்ந்தோடி
சும்மாயாரும் இல்லாம ஏர் பிடிக்கும் சனம்கோடி
புதனோடு சந்தையில புதிர் போடும் விந்தையில
புது மாடும் ஆடும் வாங்க புதையலாகும் மந்தையில
வான்தொடும் உசரத்தில் வளர்ந்து நிக்கும் தென்னை
வளமோடு நலம்சேர்க்கும் இளநிகிடக்கும் திண்ணை
பகுத்தறிவுப் பாதையில நடக்குமிங்கே சீர்த்திருத்தம்
பண்பாளர்கள் வாழ்ந்திருப்பர் எங்கள் வடசேரி வாழ்வில் நித்தம்.

இனி என்ன நான் அழைக்கும் அன்பு நெஞ்சங்கள்.

ரஞ்சனி நாராயணன்

கோமதி அரசு

தி.தமிழ் இளங்கோ

ஆதி வெங்கட்

ராஜி

குடந்தையூர் சரவணன்

என்ன ஆண் பதிவர்கள் பெயரும் இருக்கே என்று கேட்பது தெரிகிறது. ஏன் அவர்களும் முதன் முதலாக பெண் பார்க்கப் போன அனுபவத்தை எழுதலாமே. இவளின் அன்பு வேண்டுகோளை ஏற்று பதிவிடும் ஒவ்வொருவரும் குறைந்தது நால்வரை அழைக்க வேண்டும்.

Wednesday 19 March 2014

வரமா ? சாபமா ?

 
பகல் இரவு வாடிக்கையாய்
பசிக்குணவு வேடிக்கையாய்.
ஓடும் ஓட்டம் தொடர்ந்திடுதே
ஓடமும் கரை தேடிடுதே.
உழைப்பே நாளும் நோக்கமாய்
உப்பு நீரே வயிற்றின் தேக்கமாய்.
கால நேரம் கரைந்திடுதே
கவலை நாளும் பெருகிடுதே.
கடமையே என்றும் கண்ணாக-மனக்
காயமே அவருக்கு வரவாக.
கனவாய்ப் போனது இன்பமே
காட்சியாய் என்றும் வறுமையே.

உறிஞ்சும் உழைப்பை கருதிடுவீர்
உண்மையாய் ஊதியம் தந்திடுவீர்.
மனிதம் இருப்பின் நோக்கிடுவீர்
மனித நேயத்துடன் காத்திடுவீர்.
எளியோர் செய்த பாவமா
ஏழ்மை என்பது சாபமா ?

Wednesday 12 March 2014

காதலின் லாவகம் !


அவரைக்காய் தோட்டத்திலே
அந்தி சாயும் நேரத்திலே..

ஓடோடி ஒளியும் மச்சான்
ஓரக்கண்ணால் பார்ப்பதேனோ ?
சொரக்காய தேடி வந்தேனு
சொக்கி பொடி போடும் மச்சான்.
அழகான முகம் உனக்கு
அடுக்கடுக்கா பொய்யெதுக்கு ?
அத்த மக உறவிருக்க
அன்ப நீயும் மறைப்பதெதுக்கு?
தை மாசம் தொலவிருக்கு
தண்ணி குடம் பக்கமிருக்கு..
சாடமாட பேச்சு வேணும்
சங்கதிக்கு தூதும் வேணும்.
அன்ப மட்டும் வச்சிக்கிட்டு
அண்ணார்ந்து பார்த்து லாபமில்ல.

ஆத்து பக்கம் நானும் வாரேன்
அங்கோடிப் போவோம் மாமா.
காதலின் லாவகத்தை
கண்ணியமா சொல்லித்தாரேன்.

 பேச்சு வழக்கு : தொலவிருக்கு-தொலைவில்

Monday 10 February 2014

காவியம் நீ...!

 
கண்கள் கண்டெடுத்த
காவியம் நீ...
கடிதம் ஒன்றை
எழுதிடத்தான்...
எத்தனை எத்தனை
வார்த்தைகளை புரட்டியபடி..

என்னென்று அழைத்திட
அன்பே...
அது தான் நிறைய இருக்கிறதே.
ஆருயிரே...
அது தான் உனக்காக
என் உயிர் இருக்கிறதே.
அத்தானே..
யாரேனும் என்ன
நீயே சிரித்திடுவாய்..
என்னென்று எழுதிட
எல்லாமுமே நீயானபிறகு..
உனை காணும் போதில்
விழிகள் பேசிடும்
வார்த்தைகளை விடவா
இந்த விரல்கள் பேசிவிடப்போகிறது.


என்ன இப்ப இப்படி ஒரு கவிதையென கேட்பது கேட்கிறது. முகநூலில் கவிதை சங்கமம் என்ற குழுமத்திற்காக எழுதியது.

Wednesday 5 February 2014

வந்தெனைக் காத்துவிடு !


உனக்கென ஒதுக்கிய
நேரமிது நேர்த்தியாய்
கனவுகளை நெய்தபடி...
நிறங்களை கோர்த்தெடுத்து
நிமிடச் சாயத்தில்
நனைந்தபடி...
நாளொன்றிற்கு
இத்தனை நாழிகையா ?
கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது.
சீக்கிரமே
கடந்து வா...
கடமையில் இருந்து..
கடத்திப்போ..
எனை தமிழ்க் காதலிடமிருந்து.

Tuesday 28 January 2014

பிள்ளையோடு பிள்ளையாய் !


குடம் குடமா நீர் ஊற்றி-வேர்
குளிர நனைய விட்டு
வளர்ந்து வந்த தென்னம்பிள்ள
வாரிசென வளர்ந்த பிள்ள.
கிளை அசைய கீற்றசைய
கீதம் கேட்கும் நெஞ்சினிலே
வருடி விடும் தென்றலாய்
வாரி இறைக்கும் பூவை பன்னீராய்..
தொண்டை நனைக்கும் இளநீராய்.
நிழலாய் காத்து நிற்கும்
நீண்ட நெடிய கதைகள் சொல்லும்
வானை முட்டும் ஆசையுடன்
வளர்ந்து விட ஆசைகொள்ளும்.
கீற்றாய் நாராய் காயாய்
அனைத்தும் கொடுத்து
பயன் தரும்...ஆசையுடனே
நம்மோடு இணைந்து வரும்..
ஆதலால் உறவுகளே
அனைவரும் பிள்ளையோடு
பிள்ளையாய் வளர்ப்போம்
தென்னம்பிள்ளையை !

Thursday 23 January 2014

சின்ன சின்ன ஆசை !


அவரைக்காய் கொடி படர
அழகாக பந்தலிட்டு
அதன் கீழே நீ அமர
அருகமர்ந்து நா பேச
ஆச வச்சேன் அருமை மச்சான் .

ஒத்தையடிப் பாதையில
எனை தொடர்ந்து நீ வரவும்
நடையும் தான் நாட்டியமாக
நாளுந்தான் ஆச வச்சேன் .

ஆள் உயர கண்ணாடி
அதன் பின்னே நான் ஒளிய
கரம் பிடித்து  நீ இழுக்க
கண் மூடி ஆச வச்சேன் .

அடுக்கடுக்கா ஆச வர
அம்மிக்கல்லா காத்திருக்கேன்
அன்பு  இருந்தா வாயேன் மச்சான்
அல்லிப் பூவா பூத்திடுவேன் .

Monday 20 January 2014

துரத்தும் நினைவுகள் !


துரத்தும் நிலவாய்
நினைவுகள்...
தூங்கிட விடாத
கனவுகள்...
நிகழ்வுகளை துரத்தி
சம்மணமிட்டு அமரும்
மௌனங்கள்...
உன் சாமத்தியத்திற்கு
முன்பு எதுவுமே
சாத்தியப்படாது தான்..
என்ன தான் செய்து
வைத்தாய்...
எதுவுமே புலப்படாது
எல்லாமே உன்னைச் சுற்றியே
தமிழே என் தாயே
தவிக்கவிடாதே எனை
தாங்கிக்கொள் உன் மடியில்.