Monday 30 September 2013
Sunday 29 September 2013
காதலின் நளினம் !
என்னடி அதிசயம் இது
வெண்டைக்காய் நடந்திடுமோ ?
வாசலில் கோலமும் வரைந்திடுமோ ?
என்றே கேட்டான்.
பிடுங்கித் தின்ன வெட்கத்தோடே
பிடிகொடுக்காமல் எங்கே என்றேன்.
விரலதனை பிடித்து அவனும்
வில்லங்கமாய் சிரித்து நின்றான்.
குளக்கரைக்கு நானும் போனேன்
குளத்து மீனும் எம்பிகுதித்து
குத்தாட்டம் போடுதென்றான்
புரியாமல் புருவம் உயர்த்த
புது வகை மீனினம் (கண்கள்)-உன்
புது வரவை காண என்றான்.
பூபறிக்க நானும் போனேன்
அடிபாதகத்தி வண்டெல்லாம்
உன் பின்னே வர...
வாடிப்போச்சே பூக்கள் என்றான்..
என்னடி வம்பா போச்சி
வாய் ஜால மன்னனிவன்
வார்த்தையோட மல்லு கட்ட
வழியிருந்தா சொல்லிப்போயேன்.
Saturday 28 September 2013
நினைவெனும் வானில் !
நோக்காது நோக்கி
தாக்காது தாக்கும்
அவன் விழியம்பு...
காயத்துடன் அவன்
இதயக்குகைக்குள்
தஞ்சம் புகுந்தவளை
வார்த்தை உளியாள்
செதுக்கியபடி இருக்கிறான்.
இடை இடையே
சௌக்கிய விசாரிப்புகளோடு
கொஞ்சலும் கெஞ்சலுமாய்
நகரும் சந்திப்பு நேரங்களை
அவனுக்கு மட்டுமே
சொந்தமாக்கிக் கொண்டு..
வர்ணங்கள் ஏதுமின்றி
வார்த்தைகளை குழைத்தே
அலங்கார சிலையாக்கி ..
நிஜத்தின் இனிமை
நிமிடமென்றே...
நினைவெனும் வானில்
நித்தம் நித்தம்
உலா வரச்செய்கிறான்.
Sunday 22 September 2013
சந்தைக்கு போனான் ரோசக்காரன் !
சந்தனம் மணக்கும் வாசக்காரன்
சந்தைக்கு போனான் ரோசக்காரன்
கர வேட்டி தரைய வெட்ட
கட்ட பொம்மன் தோற்றம் சொட்ட
அருவா மீச சிரிப்பழகன்
ஆள மயக்கும் கருப்பழகன்
அங்குமிங்கும் பார்த்துகிட்டே
ஆடி வந்தான் காதல் சொட்ட
மல்லிகை வாசம் அழைக்குதடி
மனசும் மெல்ல பிசையுதடி
காட்சியெதும் விளங்கவில்ல
கண்முன்னே எல்லாம் கருப்புவெள்ள
சரக்கு என்ன வாங்கவந்தான் ?
சத்தியமா விளங்கவில்ல...
செக்கு மாடா சுத்தி வந்தே
செண்பகப்பூ எங்கே என்றான்.
துறு துறுன்னு பார்வை சுத்த
தும்பப்பூ பல் வரிச
கல கலன்னு தான் சிரிச்சே-அவளும்
இது மீன் கடை என்றே சொன்னா...
Wednesday 18 September 2013
ஹலோ அம்மாவா..?
பூண்டு மிளகு
தட்டிப்போட்டு
புளிய கொஞ்சமா
கரைச்சி ஊத்தி
அம்மா வைக்கும்
வாயு குழம்பு...
என்ன இலைமா அது ?
அலைபேசியில் கேட்டிடவே
அழைக்கிறேன்.
அவர் தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருக்கிறார்.. -என
யாரோ சொன்ன பிறகே
உணர்கிறேன் .
அம்மா இல்லை என்பதை.
***********************************
அம்மா கத்துக்கொடுத்த
கம்பிக் கோலங்கள்
மனதைக் கிழிக்காமல்
விரல் வழி வந்து விழுவதில்லை.
Tuesday 17 September 2013
தாலாட்டு மாறிப் போனதே !
தேடியெடுத்து விதைக்கவில்லை
தினம் நீரும் ஊற்றவில்லை
தானே வளர்ந்த வேப்பமரம்.
தாராளமாய் நிழலும் தந்து
தன் மடியில் இருத்தி
தாலாட்டும் பாடி...
உறங்க வைத்த மரம்...
வயிற்றுப்பூச்சிக்கும் மருந்தாகி
வாசலில் தோரணமுமாகி
வாரிசுகளுக்கு ஊஞ்சலுமாகி
அம்மை நாளில் படுக்கையுமாகி
காவலாய் நின்ற மரம்.
காத்து கருப்பை
விரட்டிய மரம்..
பங்காளிச் சண்டையில்
இங்குமில்லாது..
அங்குமில்லாது..
பாதையில் நின்றதால்
வெட்டினாலும் சரிபாதி
காசாக்கினாலும் சரிபாதி
தீர்ப்பான மறுநாளில்
திசைக்கொரு கதவாய்
எதிரெதிர் வீட்டு வாசலில்...
Monday 16 September 2013
மூக்கொழுகி ராசாத்தி !
ஆத்தா அருகம்புல்லும் அழகாத்தான்
மூக்குத்திய போட்டிருக்க...
ஆளான பெண்னெனக்கு
அழுக்கு பாவாடை தான்
மீதமாத்தா...?
பனித்துளி வாழ்வதற்கு
பாவடக்காரி உனக்கேன்டி
நால்வருக்கு அடுத்து பொறந்து-உனக்கு
நல்ல நேரம் இன்னும் வரல..
பொண்ணாக பிறந்திடவே
வரம் கேட்டு பொறக்கவில்ல
நான் பிறக்கும் போதே
என்அப்பன் ஆண்டியப்பன்
எனக்குனு பழமொழிய
எழுதியவன் எவனாத்தா..?
குடிசைக்குள் ஒழுகலாட்டம்
குத்தங்கொறக்கு பழமொழி
நூறுண்டு.
நூல் சேலைக்கே ஏங்கிடும்
பொழப்பா நம் வாழ்க்க
நமக்கு மூக்குத்தி ஒரு குறையா
மூக்கொழுகி ராசாத்தி.
Wednesday 11 September 2013
அழகா பூத்த ரோசாப்பூ !
அக்கா மகளே ராசாத்தி
அழகா பூத்த ரோசாப்பூ
அத்த மகன் நானிருக்க
அரளிவெத சிரிப்பெதுக்கு.
கல்லு வச்ச மூக்குத்தியும்-சிரிப்ப
கடன் கேக்கும் லோலாக்கும்
பச்ச கலரு தாவணியும்- குனிய
பருத்தி கொட்ட எடுக்குதடி.
உன்னழக பார்ததிருந்தா
பூலோகம் இருளுதடி
புதைகுழியா தெரியுதடி
போன மாசம் சமைஞ்சவளே
புது மொட்டா சிரிப்பவேள
சீமத்தொர கணக்காத்தான்
சிரம் நிமித்தி நடந்திருந்தேன்
சிருக்கி உன்ன பார்த்துப்புட்டா
சிரிச்சி பேச மறக்குறேன்டி...
மாமனுந்தான் காவலுக்கு
மருகி மருகி காத்திருக்கேன்
மரிக்கொழுந்தா வாசம் வீசி
போவதெங்கே வீதியில..
Thursday 5 September 2013
இரவின் மடியில் !
இரவின் மடியில்
கவிழ்ந்து கிடக்கிறதென்
கவிதை..
இமைகளை மூடவிடாது
வெளிச்ச பொத்தானையும்
ஏற்ற பயந்து..
எம்பித் தவிக்கும் வார்த்தைகள்
இப்படியும் அப்படியுமாக
எனை புரட்டிப்போட்ட படி.
காலை வரை உயிர்பித்திருக்குமோ ?
கனவில் வந்ததாய் கலையக்கூடுமோ ?
இல்லை...
பிரசவக்காரியின் சூட்டு வலியாய்
எழுதுமுன் மறையக் கூடுமோ ?
தீடிரென...
விரல் வழி மைகசிந்து
விடியலுக்கோர் சாசனம்
எழுதிட துடித்தபடியே
தூங்கிப்போகிறேன்.
Tuesday 3 September 2013
மகிழ்வான தருணங்கள் ...!
அலமு : சசி! நீ செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லடிம்மா.. ஆமா சொல்லிட்டேன்.
சசி : என்ன மாமி... நான் என்னத்த அப்படி செய்துவிட்டேன்னு இம்புட்டு கோவப்படுறிங்க ?
அலமு : இன்னும் என்னடிம்மா நீ செய்ய பாக்கியிருக்கு..?
சசி : ஏன் மாமி... இம்புட்டு கோவம்?
அலமு : போன வருடமே என்னைய விட்டுட்டு பதிவர் சந்திப்புக்கு போயிட்டு வந்துட்ட.. இந்த வருடம் கிளம்ப சொல்லிட்டு மறுபடி என்னைய விட்டுட்டு போனது சரியா? நான் வேற ப்யூட்டி பார்லர் எல்லாம் போயிட்டு வந்து வெயிட் பண்னேன் .
சசி : ஆமா மாமி, உங்களை கிளம்ப சொல்லிட்டு காத்திருந்தேன். நீங்க வருகிற வழியா தெரியல.. நான் கிளம்பி புலவர் ஐயா வீட்டிற்கு சனிக்கிழமை மாலையே சென்று விட்டேன். நீங்க கிளம்பினது தான் கிளம்பினிங்க... காலையில மண்டபம் வரவேண்டியது தானே.?
அலமு : ஏன்டிம்மா சொல்ல மாட்ட... நான் தனியா வந்து அங்க ‘சசி எங்க ... சசி எங்க’னு தேடிட்டு இருக்கவா? பார்த்தாலும் பார்க்காத மாதிரியில்ல நீ போவ....
சசி : என்ன மாமி இப்படி சொல்லிட்டிங்க... நான் முன்னாடி போய் அகிலா, எழில் மற்றும் கோவைப்பதிவர்களை பன்னீர், கற்கண்டு ஏதுமில்லாம வரவேற்றேன் மாமி.
அலமு : பிறகு நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதை பார்க்க.. ஆசையா கம்புயூட்டர் முன்னாடி உட்கார்ந்தா அங்க என்னடிம்மா ஒன்னுமே வரவில்லை ? நீயாவது இல்ல உங்க பதிவர் நண்பர் யாராவது என்ன நடந்தது என்று விரிவா எழுதுவாங்கனு பார்த்தா என்னடி யாருமே எழுதுகிற வழியா தெரியல...!
சசி : அதுவா மாமி...! எல்லாரும் இன்னும் அந்த இன்ப நிகழ்ச்சிதந்த சந்ந்தோஷத்துல இருந்து வெளிவரல அதனால லேட் ஆகும்..
அலமு : நீயாவது சொல்லேன்டி.. என்னமோ தெரியல... இங்க அடுத்தாத்து மாமி கூட ஊருக்கு போயிட்டா வம்பளக்க யாருமில்லடி.. எதாவது சொல்லேன்.
சசி : நான் தான் கிடைத்தேனா இன்னிக்க்கி..? சரிதான்.... சொல்றேன் மாமி.. புலவர் ஐயா வாசலில் நின்று வரவேற்று ‘‘முன்னாடியே வந்திருக்க வேண்டியது தானம்மா என்ன தயக்கம் இது உன் வீடும்மா’’ என்றார். எனக்கு மகிழ்ச்சிக்கு அளவேயில்ல. மாமி! ஐயா வீட்டில் அற்புதமான உபசரிப்பு ஐயாவின் மகள் அன்பாக பேசி ‘‘என்னங்க பிள்ளைகளோட விழாவுக்கா? பிள்ளைகளையும் பழக்கப்படுத்துறிங்களா?’’ என்று நிதானமாக அமர்ந்து பேசி பிள்ளைகளோட விளையாடினாங்க. என் சின்ன பையன் இளையவன் விழா முடிந்து வரும் போது கூட ‘‘அம்மா அந்த தாத்தா வீட்டில் இன்றும் தங்கிட்டு போலம்மா..’’ என்று சொல்லும்படி நடந்து கிட்டாங்க.. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது மாமி.
அலமு : எங்க போனலும் எப்பம்மா வீட்டுக்கு போகலாம்னு கேட்கிற உன் பையனே.. அப்படி சொன்னானா ? ஆச்சரியமா இருக்கேடிம்மா.
சசி : ஆமா மாமி எல்லாத்தையும் இழுத்து போட்டு விளையாடிட்டு இருந்தான். காலையிலும் எப்பவும் லேட்டா எழுந்துக்கிற வாண்டுங்க இங்க சீக்கிரமே எழுந்து கிளம்பிட்டானுங்க. அரங்கிற்கு வந்தா முதலில் கணேஷ் அண்ணா இருந்தாரு. அப்படியே ஒவ்வொருத்தரா பார்த்து பேசியபடி உள்ளே போனோம். விழா ஆரம்பிக்க பத்து மணியாகிவிட்டது. அதற்குள் அறிமுகப்படலம் நிகழ்ந்தது. போனில் என்னை அழைத்து பேசி வருவதாக சொல்லியிருந்த உமா வந்திருந்தாங்கட‘பாட்டி சொன்ன கதைகள்’னு இப்பவும் உற்சாகம் குன்றாம எழுதிட்ட்டிருக்கற ருக்மணி சேஷசாயி அம்ம்மா வந்ந்தாங்க. அப்புறம் மாமி.... காதல் கடிதம் எழுதினேன்னு சொன்னேனில்ல அதில் பங்கு பெற்ற பதிவர் அல்லாத தோழி ரேவதி செல்லதுரை வந்தாங்க. சின்ன பொண்ணு மாமி! நான் அவங்க எழுதியதை பார்த்து என்னைய விட பெரியவங்களா இருப்பாங்கனு நினைத்தேன். அவங்க பையனும் நம்ம இளையவனுந்தான் விழா ஏன் அவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று மாலை 6 மணிக்கும் கேட்டுட்டு பிரிய மனமில்லாது பிரிந்தாங்க.
அலமு : இந்த வருடமும் நிறைய பதிவர்கள் வந்திருந்தாங்களா ?
சசி : ஆமா மாமி உண்மைத்தமிழன், பழனி கந்தசாமி ஐயா. ரமணி ஐயா இப்படி மூத்த பதிவர்கள் எல்லாம் நிறைய பேர் வந்திருந்தாங்க. நம்ம ராஜி அக்கா பந்தாவா பெட்டிபடுக்கையோட வந்தாங்க. என்னடா இவங்க கல்யாண வீடுன்னு நினைச்சி மாத்திக்க துணி கொண்டு வந்துட்டாங்களோன்னு நினைச்சேன். பிறகு தான் சொன்னாங்க அவங்க பெங்களூர்ல பெண்னை பார்த்து விட்டு அப்படியே வருவதாக.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது. விழா ஆரம்பம். ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டாங்க. தொகுத்து வழங்க போன வருடம் போல சுரேகா வந்திருந்தாங்க. அவங்களுடன் அகிலாவும் எழிலும் தொகுத்து வழங்கினாங்க. கைத்தட்டல் விசில் பறக்க அறிமுகம் அசத்தலா நடந்தது. ஐயாவின் தனிமையைப் போக்க அவங்க மகள் துவங்கி கொடுத்த வலையின் மூலம் நிறைய நண்பர்களையும் உறவுகளை பெற்றிருப்பதா ஐயாவும் பேசினாங்க. தலைமை தாங்கியது அவர் இல்லையா அதனால அவருக்கு வருத்தமும் கூட ...
அலமு : அதனால என்னடிம்மா அவங்க அவங்க தலைமை பொறுப்புக்கு ஆளா பறக்குறாங்க. அவர் ஏன் அப்படி சொன்னார்.
சசி : மாமி தலைமை பொறுப்பு ஏற்றதால அவருக்கு எல்லோருடனும் சகஜமா பேச முடியாம இப்படி மேடையில ஏத்தி உட்கார வச்சிடுறாங்க இல்லையா .. அதனால அப்படி சொன்னாங்க. அப்புறம் நம்ம சென்னை ஹீரோ தான் முன்னிலை ..
நடுவில் ஆவிய அறிமுகம் செய்தாங்க மாமி....
அலமு : என்னடிம்மா இது பட்டப்பகலில் ஆவியா ?
சசி : அஹா..அஹா ஆமா மாமி நம்ம கோவைப் பதிவரைத்தான் ஆவி என்று அழைச்சாங்க. எல்லாருந்தான் வித விதமா யோசிச்சி வலைக்கு பெயர் வச்சிருக்காங்களே.. நான் தான் திடீர்னு தென்றல்னு வச்சிட்டேன்.
அலமு : அதனால என்னடிம்மா நல்லா தான இருக்கு... சரி சரி உன் புராணம் வேண்டாம் மற்ற நிகழ்வ பத்தி சொல்லு.
சசி : பதிவர்கள் ஆர்வம் மாதிரி வெயிலும் அதிகமா தான் இருந்தது. அசரவில்லையே நம்ம நண்பர்கள் வேர்க்க விறுவிறுக்க உள்ளயும் வெளியேயுமா ஜீஸ் குடிச்சிட்டு அடுத்தடுத்த நிகழ்வில் பங்கேற்றாங்க. அப்ப என் செல் அடித்தது நம்ம இளமதி தோழி தெரியும் இல்ல உங்களுக்கு..
அலமு : ஆமா சொல்லியிருக்கேடிம்மா க்விளிங் வேலைப்பாடுகளோட அசத்தலா பதிவிடுவாங்கனு.
சசி : ஆமா மாமி அவங்க தான் போன் பண்ணாங்க. சசி நேரலை பார்க்க முடியல நிகழ்ச்சி எப்படி நடக்குதுப்பானு கேட்டாங்க. எனக்கு உடனே நினைவு வந்ததது அவங்க முன்னாடியே சொல்லியிருந்தாங்க. ஐயா சுற்றுப்பயணம் சென்ற போது வந்து பார்க்க முடியள ஐயாவிடம் சொல்லுப்பா என்று. உடனே சென்று ஐயாவிடம் போனை கொடுத்தேன். அப்படியே கவியாழி மற்றும் மதுமதியிடம் பேசிட்டு மிக்க மகிழ்ச்சிப்பானு சொல்லிட்டு வச்சாங்க.
அலமு : பாருடிம்மா வெளிநாட்டில் இருந்தாலும் சந்திப்பை பற்றி ஆர்வமா கேட்டிருக்காங்க. பாராட்ட வேண்டிய விஷயம் தான்.
சசி : ஆமா மாமி அதற்கும் முன்னாடியே வெளிநாட்டு நண்பர் ஒருவர் அலைபேசி வழியாக அனைவருக்கும் வாழ்த்து சொன்னாங்க.
அலமு : பேஷ்....பேஷ்...!.
சசி : பிறகென்ன சிறப்பு விருந்தினர் வாமுகோமு, பாமரன், பாட்டையா, கண்மணி குணசேகரன், நா.முத்து நிலவன் எல்லாம் வந்திருந்து மிக சிறப்பா பதிவர்களுக்கு ஆர்வம் குறையாம பேசினாங்க. மதிய விருந்தும் சுவையோட முடிந்து. மதியம் நம்ம கவிஞர் மதுமதி எழுதி இயக்கின ‘90 டிகிரி’ங்கற குறும்படத்தை வெளியிட்டாங்க... ஒரு சின்னப் பொண்ணை மையமா வெச்சு, நல்ல கருத்தைச் சொல்லி... பத்தே நிமிஷத்துல அசத்த்திடாரு மதுமதி.
பாமரன்
கண்மணி குணசேகரன்
மாமி : அடடே... பதிவர்கள் சினிமாத் துறையிலயும் கலக்க ஆரம்பிச்சுட்டாங்களா... பேஷ்... அப்புறம் வேற என்ன விசேஷம்?
சசி: அதுக்கப்புறம்... பதிவர்கள் தங்களோட தனித்திறமைகளை வெளிப்படுத்த்தி அசத்த்தினாங்க. அதுக்கப்புறம் புத்தக வெளியீடு இப்படியாக வெகு சுவாரயஸ்மா தொடர்நதது மாமி.
அலமு : புத்தக வெளியீடுமா... போன வருடம் உன்னுடைய புத்தகம் வெளியீடு இல்லடிம்மா. அதுக்குள்ள ஒரு வருடம் ஓடிப்போச்சா.
சசி : ஆமா மாமி இந்த வருடம் 5 புத்தக வெளியீடு .. சென்ற ஆண்டு தென்றலின் கவிதை நூலை பெற்றுக்கொண்ட சேட்டைக்காரன் ஐயாவின் நூலும் வெளியானது மாமி. புத்தகம் வாங்கிட்டு வந்திருக்கேன் படிச்சி பாருங்க. நான் நேத்து படிச்சிட்டு இருக்கும ;போது இளையவன் ஸ்கூல்ல இருந்து வந்தான் என்னம்மா தனியா சிரிச்சிட்டு இருக்க அந்த புக்ல என்னம்மா இருக்குனு கேட்டுட்டு நாம நேத்து பார்த்தோமே அந்த தாத்தாவுதாம்மானு கேட்டான். அப்படி படிககும் போதே சிரிக்க வைக்கும் எழுத்து நடை அப்ப்பா எப்படித்தான் எழுதினாங்களோ எழுதும் போது விழுந்து விழுந்து சிரிப்பாங்களோ ? பாவம் அவர் வேற ரொம்ப ஒல்லியா வேற இருக்காரு..
சேட்டைக்காரன் ஐயா
அலமு : ஆமாண்டிம்மா நானும் போன வருடம் அவர் புகைப்படம் பார்த்தேனே.. அவரா அப்படி எழுதியிருக்கார்.. படிச்சிட்டு தரேன் தாடிம்மா.
சசி : அதனால என்ன மாமி எடுத்துக்குங்க. அப்புறம் நண்பர் மோகன் குமார் தெரியுமில்லையாஉங்களுக்கு... அவரோட ‘வெற்றிக்கோடு’ புத்தகம் வெளியாச்சி.
மோகன் குமார்
அடுத்து கோவைப்பதிவர்கள் சங்கவியின் ‘இதழில் எழுதிய கவிதைகள்’ புக்கும்.. அதே கோவையில் தோழி யாமிதாஷாநிஷாவின் ‘அவன் ஆண் தேவதை’ புக்கும் தொகுப்பாளர் சுரேகாவின் புத்தகமும் வெளியிட்டாங்க மாமி..
சங்கவி
அலமு : என்னடிம்மா இது வித்தியாசமான தலைப்பா இருக்கே எல்லாம் பேர் படிக்கும் போது படிக்கனும்னு ஆசை வருதுடிம்மா.
சுரேகா
சசி : படிங்க படிங்க எல்லா புக்குக்கும் வாங்கிட்டு வந்துட்டேன். அப்புறம் மாமி நம்ம சகோ சீனு போட்டிக்கான பரிசை புக்கா வாங்கிக்க சொன்னாங்க என்ன புக் வாங்குறதுன்னு தெரியல. அங்க என்னோட ரேவதியும் புக் தேடிட்டு இருந்தாங்க அவங்க எடுத்த கோபல்ல கிராமம் புக்கையே நானும் கேட்டேன் எடுத்துங்க நான் நாளை வாங்கிக்குறேன்னு சொன்னாங்க அதனால அந்த புக்கும் வாங்கி நம்ம ரஞ்சனி அம்மாவிடம் கையெழுத்து வாங்கிட்டு நம்ம கோவைப்பதிவர்களோடயே அவங்க வேனில் தாம்பரம் வரை வந்து இறங்கி வீடு வந்து சேர்ந்தேன் மாமி; இன்னும் விரிவா சிறப்பு விருந்தினர் எல்லாம் என்ன என்ன பேசினாங்க என்று நம்ம நண்பர்கள் ப்ளாக்ல போடுவாங்க அப்ப படிங்க இதுக்கு மேல பதிவு பெரிசா போன என்னைய யாராவது தேடி வந்து அடிப்பாங்க மாமி.
அலமு : யாராவது என்ன நானே அடிப்பேன்.. ஏதோ சுருக்கமா சொல்வனு பார்த்தா இப்படி பேசிட்டே இருக்கியே என்ன...
சசி : யார் நானா சொல்விங்க... மாமி சொல்விங்க... என்னோட வாயக்கிண்டி பேச வெச்சுட்டு... சொல்ல மாட்ட்டீங்க...! அடுத்த வாரம் வரை உங்களோட பேசப் போறதில்ல நான்!
நகைச்சுவையா உங்களுக்கு எழுத தான் தெரியும் எப்படி சிரிப்பது என்று கற்றுக்கொடுக்கும் சகோ சீனு.
டோக்கன் கொடுத்து போட்டோ எடுத்த கவியாழி நண்பர்களுடன்.
படங்கள் எல்லாம் நண்பர்கள் வலையில் சுட்டது.
Sunday 1 September 2013
பதிவர்கள் அனைவரும் வரிசையில் வருக !
மதிப்பிற்குரிய வெளியூர் மற்றும் சென்னை பதிவர்களே எல்லாம் தயவுசெய்து வரிசையில் வாங்க.. வந்து...
நேற்று மாலை நிகழ்வு முடிந்ததும்.. யாரெல்லாம் கனவு கண்டுன்டே போயி கன்டக்டர் மேல வீழுந்திங்க.
யாரெல்லாம் அவங்க அவங்க பேருந்தை விட்டு.. வேறு பேருந்தில் சென்றது.
யாரெல்லாம் இறங்க வேண்டிய நிறுத்தத்தை விட்டு அடுத்த ஊர் போனது.
மிகச்சரியாக ஊர் போய் சேர்ந்தவர்களும்..
வரிசையாக வந்து பின்னூட்ட மிட்டு செல்லவும்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயங்க.. குளிர் சாதன அறையில் மட்டும் நிகழ்ச்சி நடந்திருந்தால் மண்டபத்தார் விரட்டும் வரையில் அங்கு தான் அனைவரும் இருந்திருப்போம் என்பது நிச்சயம்... அத்தனை வெயில் தாக்கத்திலும் வேர்க்க விறுவிறுக்க விழா இறுதி வரை ஆர்வம் குறையாது கலந்து கொண்ட அனைத்து பதிவுல நண்பர்களுக்கும்.. தோழர் தோழிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நேற்றை நிகழ்வைப் பற்றி எழுத எண்ணங்கள் அலைமோதினாலும் அதற்கு தகுந்த நேரம் இது அல்ல எல்லாம் கனவில் இருப்பிங்க.. அதனால விரிவா பிறகு எழுதுகிறேன். இன்று வருகை பதிவேடு மட்டும்.
ஒரு சந்தேகமுங்க நம்ம ராஜீ அக்கா தான் மைக் எப்ப கிடைக்குன்னு காத்திருந்து விடாப்பிடியா பிடிச்சுட்டாங்க அவங்க மேடையில் இருந்து இறக்க விசில் கைததட்டல் என எல்லாம் பறந்தது.. நான் என்னங்க சொன்னேன் என் பெயர் சொன்னது குற்றமா..? (நகைச்சுவைக்காக)
Subscribe to:
Posts (Atom)