கோடி கோடியாய்ச் சேர்த்தாலும் , மாடி மாடியாய்க் கட்டினாலும் , பதவி பதவியாய் வந்தாலும் . உண்ண உணவு , குடியிருக்க குடியிருப்பு , உறங்க உறைவிடம் இதைத் தவிர மனிதன் தேடுவதெல்லாம் நிம்மதியே .
பொன்மீது அமர்ந்திருந்து , பணத்தின் மேல் துயில் கொண்டு பறி கொடுத்த நிம்மதியைத் தேடியோடும் வாழ்க்கையிது . உறவுகளின் ஆரம்பம் பெற்றவரின் பாசத்தில் . கருவாகி , உருவாகி உதிரம் உண்டு வளர்ந்து காற்றின் உறவாகும் வரை வாழ்வில் சுமையில்லை!
தொப்புள் கொடியுறவை ஏற்று புதுவாழ்க்கை, ஆனாலும் முத்தாடி , தாலாட்டி , சீராட்டி , பாலூட்டி வளர்ப்பதற்கும், "தாய்"! உண்டாயா ? உறங்கினாயா ? கற்றாயா ? கேட்டாயா ? பார்த்தாயா ? என்று, கேள்வி கேட்டு பாதை மாறிப் போகாமல் பயணம் தொடர்ந்து செல்ல அறிவூட்டும் தந்தை!
என் பேரன் , என் பேத்தி எனக் கொஞ்சி, ஊர்க் கதை , உறவின் முறை கூறித் தந்து , மாய்ந்து போன கலாச்சாரம் , மடிந்தொழிந்த சரித்திரங்கள்
பாட்டி வடை சுட்ட கதை ,நரி வந்து ஏய்த முறை ,முயல் ஆமை இடம் தோற்றுப் போன பாடம் ,குரங்கு குருவிக் கூட்டைப் பொறாமையால் பிரித்தெரிதல் !
தும்மினால் 'குரு மிளகு ' , வயிறு பொருமினால் ,'கசகசா' , தொண்டை செருமினால் 'வெற்றிலை ' , உடற் சூடு என்றால் 'வெந்தயம்' கண்பேறு சுற்றிப் போடல் , தீண்டேன்றால் படிகாரம் , காலை எழுந்து பல்துலக்கி , பானைத் தண்ணீர் குடிக்க வேண்டும் . பெண் மஞ்சள் பூசி நின்று கட்டாயம் குளிக்க வேண்டும் . கோவில் வழிபாட்டில் புதைந்து கிடக்கும் சத்தியங்கள் , கை நெல் குத்தி எடுத்து கொடுக்கும் சத்து சாதங்கள் ! பூப்பெய்து பெண் மலந்தால் அதற்க்கொரு சீராட்டு , மாமன் உறவின் மகத்துவங்கள் , குடும்பம் நடத்தப் பாடங்கள் , சமையல் செய்யப் பயிற்சிகள் , குடும்பம் கூடி வாழ அரவணைக்கும் தந்திரங்கள் . அன்பு மந்திரங்கள் !
கிழவன் இருந்த வரை வீடே வெளிச்சமாய், காலையில் காடு சென்று கொண்டுவந்த காய் , கனிகள் !. கிழவி வாழும் வரை ஆயிரம் பேர் வந்தாலும் மலர்ந்த முகத்தோடு பரிமாறிய பக்குவங்கள், இப்படி சொல்லி மாய்ந்த பெற்றோரே , இப்போது பிள்ளைகளை விட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கும் காலம் இது . தாயிழந்த குஞ்சுகள் போல் நாம் .
கிராமங்கள் நகரமாக , மனங்கள் நரகமாக , உறவுகள் பொய்யாக , உளுத்துப் போன காலங்கள் . நோய்கள் பெருகியிங்கே, உண்மை விடை பெற்று, தீமைகள் விளைச்சல்களாய் . நாளை எதை உண்போம் , மாத்திரையா ? காற்றையா ? புரியவில்லை .
அழகான குடிசையிலே, அன்பான இதயங்களோடு, பண்பான வாழ்வு வாழ்ந்து , இயற்கையை அனுபவித்து , காடு , மேடு , ஓடியாடி , துள்ளித் திரிந்த கிழ உறவுகளை இப்போது மனம்தேட ...
அவர்களும் நாகரீக மோகம் தேடிப்போக . கூடு சிதைந்திங்கே, குஞ்சுகள் ஏக்கத்தோடு! விரட்டியதும் நாம்தான் , தேடுவதும் நாமேதான் . இழந்தது கிடைத்திடுமா ?
பெற்ற பிள்ளைகளின் வாழ்வொன்றே இலட்சியம் என்று வாழ்ந்த மக்களின் மனம் கூட்டுக் குடும்பத்தில் லயித்திருந்தது . பேரப்பிள்ளைகளின் அன்பில் உலகை மறந்து சகிப்புத் தன்மையோடும் , விட்டுக்கொடுத்தும் வாழ்ந்த முதியோர்களைத் தேடும் காலமிது .
வம்பெதற்கு என பிறந்த பிள்ளைகளையும் விட்டு தனித்து நிற்கின்ற நிலை வளர்த்ததுதான் நாகரீகமா ?
தனிக்குடித்தனம் என்ற பெயரில் . சிறகு முளைத்த பறவைகளை கூடு விட்டு விரட்டுவது ஏனோ ?
இத்தனை காலம் அடிமையாய் வாழ்ந்து விட்டோம் இனி அது தேவையில்லை என்று அடிமை விலங்கொடித்து முதியோர்கள் சிந்தித்ததின் விளைச்சல் இது தானோ ? கூட்டுக் குடும்பங்களும் இல்லை . கூட்டுறவும் இல்லை .