அலமு : சசி....சசி ! என்ன எப்படி இருக்க பதிவுலகம் எப்படி இருக்கு ?
சசி : வாங்கோ மாமி ....வாங்கோ ! என்னதிது நான் உங்களுக்கு கம்பூட்டர் சொல்லித்தந்த நேரமோ என்னவோ அதோட காணமா போயிட்டிங்க. என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு இருந்தேன்..
அலமு : நல்ல அக்கறை தாண்டி மா உனக்கு .
சசி : ஏன் மாமி எனக்கு அக்கறையே இல்லையா ?
அலமு : அது தான் பார்த்தேனே. எங்கடா மாமிய காணோமே என்னனு தேடினியா ?
சசி : மாமி நீங்க தான் உங்க பேரனை மகளை மகனை பார்க்க போனதா மாமா சொன்னாங்க. அதனால அப்படியே இருந்துவிட்டேன்.
அலமு : அதுக்குத்தான் அப்பவே கேட்டேன். நீங்க எல்லாம் பேசுற மாதிரி எனக்கும் சொல்லி குடுடினு.
சசி : ஆமா டியூசன் வந்தா ஒழுங்கா வரனுமில்லையா ?
அலமு : என் பேரனும் என்னமோ சொன்னான்டி மா. என்னவோ பச்சை லைட்டு எரியும்... அப்ப நீ இருப்பனு நானும் வீட்ல விளக்கு கூட ஏத்தாம பார்த்துட்டே இருந்தேன்டிமா. டமால்னு ஒரு சத்தம்..
சசி : அய்யய்யோ மாமி என்னத்த போட்டு உடைச்சிங்க.
அலமு : அத ஏன்டிமா கேட்குற... இங்க இலவசமா குடுத்தாங்கனு நம்ம மூனாவது வீட்டு கோகிலா பையனோட லேப் டாப்ப விலைக்கு கொடுத்தான் அத வாங்கிட்டு போனேன். அதான்டி மா வெடிச்சிட்டுது.
சசி : பாருங்க மாமி பசங்களுக்கு படிக்க கொடுத்தா இப்படி செய்யுதுங்க. அது கூட பரவாயில்ல தெருவில வச்சிட்டு படம் பாக்குதுங்க. கேம் விளையாடுதுங்க. எங்க போனாலும் பஸ்ல ரயில்லனு கூட இல்லாம ஒரே பாட்டும் கூத்துமா சுத்துதுங்க.
அலமு : அது தாண்டிமா. அரசியல் கால் வயிறு கஞ்சிய கூட முழுசா குடிக்க முடியாத படி அரசி பருப்பு வெங்காயம் எல்லாத்தோட விலையும் ஏத்திடுவா.. இப்படி டிவி லேப் டாப்புனு காச வீணடிப்பா.
சசி : ஆமா மாமி இது என்ன நாமளும் பெட்டி கடை மாதிரி இல்ல திண்ணைல கதை பேச உட்கார்ந்துட்டோம்.
அலமு : இருக்கட்டும் விடுடி மா. இப்படி பேச முடியாம தாண்டி ஒரு மாசமா அவஸ்தப்பட்டேன். என்னத்த சொல்ல.
சசி : ஆமா நீங்க தான வடிவேலு சொல்ற மாதிரி நான் வெளிநாட்டுக்கு போறேன் வெளிநாட்டுக்கு போறேன்னு குதிச்சிண்டு போனிங்க.
அலமு : ரெண்டு நாள் மூனு நாள் போனமா வந்தமான்னு இருக்கனும்டிம்மா. அங்க எல்லாம் நமக்கு சரிப்படாது. மெசின் மாதிரி ஓடுறா எல்லாம்.
சசி : பணம் பணம் துட்டு மணி மணி மாமி..
அலமு : நீ ஜாலியா லீவுக்கு உங்க ஊருக்கு எல்லாம் போய் சுத்திட்டு இப்படி பாட்டெல்லாம் பாடுவடியம்மா .
சசி : ஆமா மாமி எங்க இந்த பசங்களுக்கு எங்க ஊரு பிடிக்கலையாம் மாமி . என் சின்ன மகன் அடிச்சான் பாருங்க கூத்து.
அலமு : சரியான வாலுடி அவன் என்ன பண்ணான்.
சசி : எங்க வீடு அழகா திண்ணை பக்கமா ஜன்னல் வச்சி கட்டி வரிசையா இருக்கும் இல்ல மாமி .
அலமு : ஆமாண்டி நானும் வந்திருக்கேனே அழகாத்தான் இருந்தது. அவனுக்கு என்னவாம் ?
சசி : அம்மா இது என்ன ஓட்டை ஓட்டையா இருக்கு நான் இங்க இருக்கமாட்டேன்னு திண்ணையில ஏறி நின்னுட்டான் மாமி. அதோட விட்டானா ?
அலமு : ஏன் அப்பவே கிளம்பிட்டியா ?
சசி : இல்ல மாமி அங்க கரண்டு வேற போய் போய் வருமே அப்ப வெளிய திண்ணைல தான் உட்கார்ந்திட்டு இருந்தோம். பசங்க எல்லாம் விளையாடிட்டு இருந்தாங்க. திண்ணையில ஏறி நின்னா ஓடு கைக்கு எட்டும்படியா இருந்தது . இவன் ஏறி ஓட்டை பிடிச்சிட்டு இருந்தான் மாமி. நான் ஓட்ல எதாவது பூச்சி இருக்குமேன்னு அத ஏன்டா பிடிக்கிற வேனாம்னு சொன்னேன். அதுக்கு அவன் என்ன தெரியுமா சொன்னான் தெருவில் எல்லாம் ஒரே சிரிப்பு. சசிகலா யாரு உன் பையனா இப்படி பேசுறான் அப்படின்னு எல்லாம் கேட்டாங்க.
அலமு : அப்படி என்ன தாண்டி கேட்டான் வாலு .
சசி : ஓட்டுக்கு எல்லாம் ஏன் மா ஸ்குரு போடாம அப்படியே விட்டுட்டாங்கனு கேட்குறான் மாமி. என்ன சொல்ல ?
அலமு :அஹா....அஹா சரியான கேள்விடிமா. எப்படித்தான் சமாளிக்கிறியோ ? ஆமா கேட்டேனே பதிவுலகம் எப்படி இருக்கு ?
சசி : நல்லா இருக்கு மாமி. நேத்து கூட மஞ்சு அக்காவை புலவர் ஐயா வீட்டிற்கு சென்று பார்த்துட்டு வந்தேன்.
அலமு : துபாய்ல இருக்காங்கனு சொன்னியே அவங்களா ? இங்க வந்திருக்காங்களா ஏன்டிமா என்னையும் அழைச்சிட்டு போயிருக்கலாம் இல்லையா ?
சசி : நீங்க வந்ததே தெரியாது மாமி. கண்ணதாசன் வந்திருந்தாங்க. அவங்களோட நம்ம மின்னலு கணேஷ் வந்தாக அவங்களோட ஆவி வந்திருந்தாக...
அலமு : இருடிம்மா என்ன என்ன ஆவியா ?
சசி : ஆமா மாமி அவங்க பெயர் ஆனந்து அவங்க பிளாக் பெயர் ஆவி அதனால அப்படி.
அலமு : பயந்தே போனேன்டிம்மா.
சசி : அப்புறம் நம்ம சீனு அவங்க நண்பர் ரூபக் அப்புறம் ஸ்கூல் பையன் ,மதுமதி , அவங்க நண்பர் , சேட்டைக்காரன் இப்படி மொத்தமா ஒரு குரூப்பா போய் அய்யாவோட தனிமையை விரட்டி அடிச்சிட்டு வந்தோம்.
அலமு : நீ மட்டுந்தான் ஜாலியா இருந்தியா நான் கூடத்தான் உன் நண்பரை பார்த்தேன்டிமா.
சசி : யாரை ..?எப்ப..? எங்க மாமி ?
அலமு : ஏன் இத்தன கேள்வி ?
சசி : சொல்லுங்க மாமி ப்ளீஸ்...
அலமு : என் மகளைப்பார்க்க போன போது நம்ம பூரி கட்டைய (மதுரைத் தமிழன் )பார்த்தேன்டிமா.
சசி : மாமி நிஜமாவா ? என்ன சொன்னாங்க எப்படி இருக்காங்க ?
அலமு : நல்லா பேசினாங்க . பாவம் ஆனா பூரிக்கட்டை தழும்புகளைத்தான் பார்க்க முடியள எல்லாமே உள் காயமா இருக்குமோடி?
சசி : இருக்கும் இருக்கும் மாமி ....பார்த்திங்களா நாங்க இங்க வருகிற பதிவர்களைத்தான் பார்த்து பேசுறோம் நீங்க பாருங்க வெளிநாட்டு பதிவர்களை அங்கயே போய் பார்த்துட்டு வறிங்க. ம்ம் அசத்துங்க.
முந்தைய அலமுவின் அரட்டையை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்.