மின்னல் வரிகள் திரு கணேஷ் அவர்கள் தொடர பதிவெழுத அழைத்தமையால் நானும் எனது பள்ளி நாட்களை திரும்பிப் பார்க்கிறேன் .
நான் செய்த குறும்புத் தனங்களை பகிர்ந்து கொள்கிறேன் .
எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சொல்லிற்கு ஏற்ப எனது முதல் வகுப்பு ஆசிரியர் மதிபிற்க்குரியவர் திரு .கண்ணையா அவர்கள் .
நானும் எனது தம்பியும் இரட்டைப்பிறவிகள் என்பதால் இருவரும் முதல் வகுப்பில் படிக்கும் போது , ஆசிரியர் திட்டியதால் அவரின் சைக்கிளில் காத்து பிடுங்கி விட்ட என் தம்பியை ஐந்து ஆறு பிள்ளைகள் தூக்கிச் சென்ற போதும் பார்த்துக்கொண்டிருத்த எனை அழைத்து அன்பு , பாசம் , நட்பு , பணிவு , கடமை , ஒற்றுமை ....இப்படி எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்ததே முதல் வகுப்பு ஆசிரியர் தான் .
அதோடு நின்று விடாமல் அடுத்தடுத்த வகுப்புகளிலும் எங்கள் குறும்புத் தனங்கள் அளவில்லாமல் போனது . எனக்கு பக்கத்தில் இருந்த முருகன் என்ற பையனை சிலேட்டால் அடித்து மண்டையை உடைத்த எனை அழைத்து அறிவுரை சொன்ன ஆசிரியர்கள் .
அன்று முதல் அணைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நீதி நெறிக் கதைகள் , திருக்குறள் விளக்கம் , புத்தகங்கள் படிப்பது , பேச்சுத்திறனை வளர்ப்பது , ஓவியம் வரைதல் ....இப்படி அவரவர்க்கு இருக்கும் திறனை வெளிப்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அறிவுரைகள் சொல்வார் . ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இருந்த எங்கள் பள்ளியில் முதல் வகுப்பு ஆசிரியர் என்றாலே மற்ற ஆசிரியர்கள் மட்டும் அல்லாது எல்லா பிள்ளைகளுக்கும் பிடிக்கும் விதம் நடந்து கொள்வார் .
எங்கள் வீட்டில் இருந்து பத்து வீடு தள்ளி பள்ளிக்கூடம் என்பதால் மதிய உணவிற்கு மட்டுமல்லாது , இரண்டு வகுப்பிற்கு நடுவே விடும் இடைவேளைகளிலும் வீட்டிற்க்கு எனது சக தோழிகளை அழைத்து செல்வேன் . அதற்கும் வழி இல்லாமல் போனது அந்த முதல் வகுப்பு ஆசிரியரால் .
புத்தக படிப்போடு மட்டும் நின்று விடாமல் மரம் நடுதல் , பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற நற்ப்பண்புகளும் சொல்லிக்கொடுத்தது ஆரம்பப் பள்ளிக்கூடமே .
எல்லாம் வகுப்பு இறுதி தேர்வெழுதும் நேரத்தில் எல்லாரும் நல்ல படிச்சி நிறைய மதிப்பெண்கள் வாங்கி நம் பள்ளியின் பெயரை காப்பாத்தனும் என்று பிள்ளையாரிடம் வேண்டிகோங்க என்று ஆசிரியர் கூறிக்கொண்டிருக்கும் போதே , இடையில் நான் எல்லாம் நிறைய மதிப்பெண்கள் வாங்கினால் பிள்ளையார் திரும்பி நமக்கு தேங்காய் உடைத்துவிடுவார் என்று கூறயதும் ஆசிரியர் முதற்கொண்டு அனைவருமே சிரித்து விட்டனர் .
அடுத்து ஒன்பதாம் வகுப்பு படிக்க ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வந்தவாசியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தோம் .அப்போதே உணர்ந்து கொண்டோம் முதல் வகுப்பு ஆசிரியரின் அருமையை .
ஒன்பதாம் வகுப்பில் எனக்கு ஒரு தோழி கிடைத்தால் பெயர் ஜெகதீஸ்வரி .
அமைதியானவள் அடுத்தடுத்த வகுப்புகளில் எனக்கு சகலமுமாய் இருந்தவள் .ஒரே தெருவில் எங்கள் வீடு இருந்ததால் தினமும் எனை அவள் இரு சக்கர ஊர்தியில் அழைத்து செல்ல தவறாதவள் .
இன்றும் ஊருக்கு செல்லும் நேரங்களில் எங்கள் ஆரம்ப பள்ளிக்கூடத்தை பார்க்கும் போதெல்லாம் புது வடிவம் பெற்று உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் என் கண்களுக்கு தெரிவதில்லை . மரத்தடி நிழலில் எங்களை அமர வைத்து பாடம் எடுத்த அந்த அழகு மைதானமும் , ஆசிரியர்களுமே என் மனக்கண்ணில் வந்து போகின்றன .
என் தோழியை மட்டும் காண முடியாதலால் என் தேடல் தொடர்கிறது ..
என் அன்புத் தோழிக்கு
நியும் நானுமாய் ..
ஒன்றாய் கைகோர்த்து
நடந்து நடந்து தேய்ந்து போன ...
சாலைகள் இப்போதுதான் ..
சரி பார்க்கப்படுகிறதாம் ,
வா சென்று பார்த்து வரலாம் ...
நம் புன்னகையும் ..
கேளிக்கையும் பாராமல் ..
பள்ளி வளாகத்தில் இருந்த ...
பாக்கு மரம் பட்டு போய் விட்டதாம் ..
வா சென்று பார்த்து வரலாம் ...
எனை உன் இதயத்தில் மட்டும் ...
சுமந்தது போதாதென ..
உன் இருசக்கர வாகனத்திலும் ..
அல்லவா சுமந்திருகிறாய் ..
என் அன்புத் தோழியே ..
எங்கிருக்கிறாய் நீயடி ..
என் தாய்க்கு பிறகு ..
என் பசி பொறுக்காதவள் ..
நியும் அல்லவா ,
இனியவளே ..
உன்னிடத்தில் பிடித்தது ..
உன் மவுனமே என்பேன் ..
அதற்காக இப்படியா ..
நீ எங்கிருக்கிறாய் ..
என்பதை கூட தெரிவிக்காமல் ,
மவுனித்து கிடக்கிறாய் .
தேடலுடன் அன்பு சசிகலா.
என்றென்றும் நினைக்க நினைக்க இனிக்கும் பசுமை நினைவுகள் .