Friday 23 November 2012

புதிய பாதையிலே பயணிப்போம் !


கரைதேடும் வாழ்க்கையிலிங்கே
கரைந்தோடும் மேகமாய்
என்னினம் பெண்ணினம் !
காயங்கள் மட்டும்
மீதமாய்ச் சினேகிதமாய் !

விதையொன்று முளைக்கையிலே
 சுடுநீர் ஊற்றியழிக்கும்
வினைகளே அதிகம் புவியினிலே
அதைமீறிக் கொடியானால்
கிள்ளியெறியும் வீணர்கூட்டம்.

பாலையில் மலர் பூப்பது போல்
சாலையோரத்தில் சில மணப்பூக்கள்
ஊர்திகள் மட்டுமின்றி மனித
எச்சமும் இவர்மீதுத் தூற்றலாய்.

விடிவு வருமென்று காத்திருந்து முடிவில்
விதியிதுவென்று நொந்து மாண்டோர் ஏராளம்.

சதிவெல்லக் கூடிடவும் மனதில்
உறுதியில்லா மென் இதழாய்
பொங்கி எழச் சொல்லவில்லை
உரிமை நமக்குண்டு.

கண்ணீராய்ப் பெண் வாழ்வுக்
 கரைவதில் நியாயமில்லை
கடலளவு சோகத்தை
கையளவாய் ஆக்கிடவே.

நீந்தக் கற்றல் நன்று அடிமை
வாழ்வெதற்கு நாமும் மானிடரே
கனிகொடுக்கும் மரத்துக்கு
ஆணிவேர் நாமன்றோ ?
தாக்கங்கள் அத்தனையும்
 சமூக அவலங்களாய்
ஆக்கங்களில் நாமிலையோ
 பின்னேன் சேதங்கள்.

சொந்தக் காலில் நிற்கின்ற
நிலைவர உழைத்திடுவோம்.
நினைவும் கனவும் பொதுவுடமைப்
 புதிய வேதம் செய்வோம்
எத்தனை நாள் மதிக்கின்ற
படிகல்லாய் வாழ்ந்திருக்க
சிலையல்ல நாமுலகில்
உயிருள்ளச் சித்திரங்கள்.

போன காலம் போகட்டும்
வருங்காலம் நமதாகட்டும்
வானில் பறக்க ஆசையில்லை
வாழ்வில் நாமும் வாசமுல்லை
உணர வேண்டும் இல்லை
 உணர்த்த வேண்டும்.
பொய்யா முகம் நம்மிலுண்டு
பொய் முகம் கண்டு ஓடவேண்டாம்.

பேதைப் பெண்ணே எழுந்திடுப்
புதிய பாதையிலே பயணிப்போம்
வருவதை வென்றிடுவோம்
காலம் தேய்ந்து போனாலும்
காவியமாய் நாம் வாழ
புறப்படுவோம் வென்றிடுவோம்.
தமிழ்த் தாயின் துணையோடு.

17 comments:

  1. அருமையான கவிதை
    புகைப்படம் இயல்பாக இருக்கிறது

    ReplyDelete
  2. அழகான கவிதை
    ஏனோ பெண்களை இன்னும் பாவப்பட்ட படைப்பாகவே பார்க்கிறார்கள் ...

    ஆண்களுக்கு சமனான சுதந்திரம் தேவையென்ற காலம் இருந்தது இப்போ அதையும் வென்று விட்டார்களே

    ReplyDelete
  3. நீந்தக் கற்றல் நன்று அடிமை
    வாழ்வெதற்கு நாமும் மானிடரே
    கனிகொடுக்கும் மரத்துக்கு
    ஆணிவேர் நாமன்றோ ?

    தன்னம்பிக்கை ஊட்டும்
    தளராத கவிதைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. பிரச்சனைகள் விரைவில் தீரட்டும்...
    எல்லாமே நன்றாக நடக்கட்டும்...
    tm3

    ReplyDelete
  5. கனிகொடுக்கும் மரத்துக்கு
    ஆணிவேர் நாமன்றோ ?

    நம்பிக்கை தரும் வரிகள்..

    ReplyDelete
  6. விவேகத்தை ஊட்டக்கூடிய உங்களின் வரிகள் அருமை

    ReplyDelete
  7. //போன காலம் போகட்டும்
    வருங்காலம் நமதாகட்டும்
    வானில் பறக்க ஆசையில்லை
    வாழ்வில் நாமும் வாசமுல்லை
    உணர வேண்டும் இல்லை
    உணர்த்த வேண்டும்.
    பொய்யா முகம் நம்மிலுண்டு
    பொய் முகம் கண்டு ஓடவேண்டாம்.// அருமையான வரிகள்! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. படைப்பாக்கம் அருமை ..
    சொல்லத்தானே முடியும் , வருவது அவரவர் விருப்பம் அக்கா

    ReplyDelete
  9. வணக்கம்
    அருமையான கவிதை நல்ல சொற்பிரயோகங்கள் வாழ்த்துக்கள்
    சமைக்கிற கரங்களும் சரித்திரம் படைக்கும் ஒருநாளில்-

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. புரட்சி கவிதை பூத்தது தென்றலில். நன்று

    ReplyDelete
  11. அழகான கவிதை வரிகள் .. அருமை

    ReplyDelete
  12. பேதைப் பெண்ணே எழுந்திடுப்
    புதிய பாதையிலே பயணிப்போம்//
    எழுச்சி மிகும் ஏற்றம் பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
    போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
    - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
    என்ற கவிஞரின் வழியில் சகோதரியின் முழக்கம்!

    ReplyDelete
  14. புதிய பாதை... சிறப்பான கவிதை சகோ. படமும் நன்று.

    ReplyDelete
  15. சிறப்பான கவிதை

    ReplyDelete
  16. புரட்சி விதை ஒன்றை
    விதைத்துப் போகிறது
    உங்களின் கவிதை சகோதரி....

    ReplyDelete