Sunday 17 March 2013

மாறாத மனித இயல்பு !



உழைப்பொன்றையே தன்னில் வைத்து
உலகுக்காய் உழைக்கும் கடிகாரமும்
தானே நின்றதுண்டா..?
நாம் கவனிக்க மறுப்பின் நிற்கும்.

நல்ல நேரம் கெட்ட நேரம்
உள்ள நேரம் இல்லா நேரம்
இரவு நேரம் பகல் நேரம்
அதிலும் குறை கண்டு திரிகின்றோம்.

காலமது தன் மணிக்கணக்கை காட்டி
சுழன்று கொண்டேயிருக்கிறது
யாரையும் எதிர்பார்த்தல்ல
எதையும் எதிர்பார்த்துமல்ல.

தன் வழி அது போகும்
நாம் அதன் வழி போவோம்
ஆனாலும் 
அதை குறை சொல்லியே நாம்.
ஏன் இந்த தாகம் 
குறை தேடும் மோகம்
உயிரில்லா கடிகாரத்தை மட்டுமல்ல
உயிருள்ள இதயத்தையும்
எண்ணத்திலும் குறை தேடி நாம்.

மாற மாட்டோமா
மாறின் அது நன்று
மாறாதிருப்பின் முடிவு வரும் 
அன்று கடிகாரம் ஓடும்
நாம் நின்றிருப்போம்.

18 comments:

  1. அருமை...

    முடிவை முடிவு செய்வது நம் மனம்...

    ReplyDelete
  2. மனதில் குறையையும் இதயத்தில் கறையையும் கொண்டு அலைந்தால் காண்பதெல்லாமே குறையாய், கறையாய்த்தானே தெரியும்.

    போட்டிருக்கும் கறுப்பு நிறக்கண்ணாடியை மாற்றவேண்டும். காட்சி தெளிவாக.

    சிந்தனைக்குரிய சிறந்த படைப்பு. அருமை. வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  3. காலம் பொன் போன்றது அவற்றை நல் வழியில் செயல்படுத்துவது நமது கடமை

    அழகிய ஆக்கம் !

    தொடர வாழ்த்துகள்....

    ReplyDelete

  4. வணக்கம்!

    நல்ல நேரம் என்பதுவும்
    கெட்ட காலம் என்பதுவும்
    வல்ல சதியோன் வகுத்தனவே!
    வாழ்வை உணா்ந்து தெளிந்திடுக!
    சொல்ல நினைக்கும் கருத்துகளைச்
    சொக்கும் வண்ண மணமேந்தி
    மெல்ல வீசும் தமிழ்த்தென்றல்
    மேலும் மேலும் தொடருகவே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  5. காலம் காத்திருப்பதில்லை! நாமும் குறை தவிர்த்து நிறை சேர்ப்போம்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தன் வழி அது போகும்
    நாம் அதன் வழி போவோம்
    ஆனாலும்
    அதை குறை சொல்லியே நாம்.
    ஏன் இந்த தாகம்
    குறை தேடும் மோகம்
    உயிரில்லா கடிகாரத்தை மட்டுமல்ல
    உயிருள்ள இதயத்தையும்
    எண்ணத்திலும் குறை தேடி நாம்.

    வலிகள் நிறைந்த கவிதை வரிகள்
    உங்கள் உள்ளம் மென்மையானது
    அதனால்த் தான் உயிரற்ற கடிகாரத்தையும்
    போற்றிக் கவி பாட முடிகின்றது :( வாழ்த்துக்கள்
    தோழி வழமான கவிதை இவைகள் வாழ்வாங்கு
    வாழட்டும் .......

    ReplyDelete
  7. இப்படித்தான் ஓடியும் ஓடாமலும் மனிதர்கள்

    நம்மால் உருவாக்கப்பட்ட எந்திரம் சரியாகவே

    நில்லாமல் தன்னுடைய பணியை செய்கின்றனவே...

    உருவாக்கிய நாம் தான் நமக்கேற்றவாறு சோம்பலினால்

    நேரத்தில் இல்லை நல்லது கேட்டது எப்போதுமே

    அதிலும் நம்மவர்கள் பிரித்து பார்த்து ஓய்வும் எடுத்தே

    மற்றவர்களை குறை சொல்லி காலம் கழிக்கிறார்கள்...

    அருமையாக சொன்னீர்கள் தென்றலாய் வளம் வரும் சசியே

    உலகமே நின்றாலும் நிற்காமல் ஓடவேண்டும் மனிதகுலம்....

    எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்றுமே என்றென்றுமே

    இதற்கெல்லாம் நேரம் காலம் நான் எப்போதுமே பார்த்ததில்லை....

    ReplyDelete
  8. கருவறையுள்தங்கி கல்லறை காணும்வரை
    ஓட்டம் ஓட்டம் ஓய்வில்லா பொய்யோட்டம்
    கதிரொளி கண்டு உண்டே ஆரம்பம் கண்
    பார்வையின் பிடிசிக்கி பேரின்பமெனப்பாடி
    சிற்றின்பக் கடலதுவீழ்ந்தே வழியறியாது
    திரும்பினத்தனையும் நமைவிட்டுப்போக
    திருந்தாத படிவங்களாய் நாம் குறையோடு
    குறைமட்டும் சூடி வாடி வம்பதனைத் தேடி
    வாழும் காலம் தொலைத்தது வாழாகாலமின்
    கனவேந்தி காலம் கரைகிறததென கடிகாரம்
    நநினைப்பூட்டும் நிஜமறியாமல் ஆதையும்
    குறைகண்டே குறைநிலவாய் தேய்ந்து குறை
    பிரசவ பிறப்பாய் எண்ணம்சூடி நரகமா வாழ்வு
    சொர்கமா அறியாமல் குறைகண்டே ஓவிதுதான்
    மானிடராய்ப் பிறந்து மேன்மையடைதலோ
    கடிகாரமுமிருக்கும் படிகல்லும் வாழும் நாம்?

    ReplyDelete
  9. தன் வழி அது போகும்
    நாம் அதன் வழி போவோம்//

    வேறவழி ?

    ReplyDelete
  10. உயிரில்லா கடிகாரத்தை மட்டுமல்ல
    உயிருள்ள இதயத்தையும்
    எண்ணத்திலும் குறை தேடி நாம்.

    மாற மாட்டோமா
    மாறின் அது நன்று
    மாறாதிருப்பின் முடிவு வரும்
    அன்று கடிகாரம் ஓடும்
    நாம் நின்றிருப்போம்.//
    குறை காணும் பழக்கத்தை விடச்சொல்லும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  11. // மாற மாட்டோமா
    மாறின் அது நன்று
    மாறாதிருப்பின் முடிவு வரும்
    அன்று கடிகாரம் ஓடும்
    நாம் நின்றிருப்போம்.// - அருமை!

    ReplyDelete
  12. அருமையான வரிகள்... உங்கள் தளத்துக்கு இது முதல் தடவை என நினைக்கிறேன்... நன்றி

    த.ம 8

    ReplyDelete
  13. காலம் எவருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை.....

    நல்ல கவிதை.... பாராட்டுகள்.

    ReplyDelete
  14. காலமது தன் மணிக்கணக்கை காட்டி
    சுழன்று கொண்டேயிருக்கிறது
    யாரையும் எதிர்பார்த்தல்ல
    எதையும் எதிர்பார்த்துமல்ல.

    கால ஓட்டத்துடன் நாமும் மாற வேண்டும். மிக சிறந்த கவிதையில் இந்தச் செய்தியை சொல்லி இருக்கிறீர்கள், சசி.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. unmai sonthame...!

    azhakaa sollideenga...!

    ReplyDelete
  16. அன்பின் சசிகலா - கவிதை அருமை - இறுதியில் மாறாதிருப்பின் என்ன நடக்கும் என்பதனைத் தெளிவாகக் கூறியமை நன்று - இன்றைய மறுமொழிகள் அனைத்தும் வலைச்சர வாயிலாக வந்து பார்த்து படித்து இரசித்து எழுதப்பட்ட மறுமொழிகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நன்றியும் ஐயா.

      Delete