Showing posts with label அவலம். Show all posts
Showing posts with label அவலம். Show all posts

Thursday, 26 July 2012

கல்வியெனும் பெயரால்.....


 காலையில் பொட்டு வைத்துப் பூச்சூடிய பின் பள்ளி செல்ல அழுத தன் குழந்தையின் கையில் ஒற்றை ருபாய் கொடுத்து  'பண்டம் வாங்கிக் கொள்' என்று சமாதானம் செய்து வழி அனுப்பிய அவளுக்கு தெரியாது.

 அடுத்த நாளே தன் பாசமகளின் நெற்றியில் அந்த ஒற்றை ரூபாயை வைத்து இறுதியாக பிணமாக...அய்யோ இதற்கு மேல் என்னால் அந்தக் காட்சியை விவரிக்க இயலவில்லை.  எனக்கே முடியவில்லை என்றால் அந்தத் தாய் மனது என்ன வேதனைபட்டிருக்கும், ஆட்டோ ஓட்டி பாடுபட்ட பணத்தில் தன் குழந்தைகளை படிக்க வைக்கும் அந்தத் தந்தையின் மனது எவ்வளவு பாடுபட்டிருக்கும். மனதைப் பாதித்த அந்த செய்தி... காட்சியை விரிக்கிறேன்...

பள்ளி வாகனங்களை கவனித்து இருகிறீர்களா, சென்னை போன்ற பெருநகரங்களில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசலில் வேகமாக செல்லும் ஒரு வாகனம் உண்டென்றால் அது பள்ளி வாகனமாகத் தான் இருக்கும். திடிரென்று பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்துகையில் தலையிலும் மார்பிலும் அடிபட்டு வந்த பல குழந்தைகளின் நிலையைப் பற்றி நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் சென்னையில் நேற்று நடந்த இந்த விபத்தோ சற்றே கோரமானது, கோரமானது என்பதை விட அகோரமானது என்பது தான் மிகச் சரி.

ஸ்ருதி.. கோர விபத்தில் பலியான அந்தக் குழந்தையின் பெயர் இது தான். எத்தனை கனவுகளுடன் பிறந்த குழந்தையோ? கண் மூடித்திறக்கும் நேரத்தில் பேருந்துக்குள் இருந்த ஒழுங்காக அடைக்கப்படாத ஓட்டையின் வழியாக தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி...

 இன்று அந்தக் குடும்பமே சின்னபின்னமாகிப் போயிருக்கும் விபத்திற்குக் காரணம் பேருந்தில் இருந்த அந்த ஓட்டையா? தர்ம அடி வாங்கிய அந்த ஓட்டுநரா? சில நாட்களுக்கு முன்பு  எஃப் சி சென்ற அந்தப் பேருந்தை லஞ்சம் பெற்று முறையாக சோதனையிடாத அந்த RTO வா?  இல்லை பணம் பணம் என்று பணத்தைக் கொட்டிக் கொடுத்தால் பிணத்திற்குக் கூட பாடம் எடுக்கத் தயாராய் இருக்கும் தனியார் பள்ளியா? இவர்களை நம்பித் தானே நாமும் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

விபத்து என்று ஒன்று நடந்தால் மட்டும் தான் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உறக்கம் கலையும் போல! ஒரு கும்பகோணம் உங்களுக்கு போதாதா?  மீண்டும் ஒரு பள்ளி பற்றி எரிய வேண்டுமா? எத்தனை பள்ளி வாகனகள் விபத்திற்கு உள்ளாகின்றன அப்போது மட்டும் அறிக்கை விடுகிறீர்களே, அதை செயல் படுத்த உங்களுக்கு அவகாசம் இல்லையா?  அரசு ஏன் மொளனம் காக்கிறது எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் வாங்கும் நீங்கள் உயிரோடு ஏன் விளையாடுகிறீர்கள் உங்களைப் போன்ற பள்ளத் தலைமைகளும் இருக்கும் பொழுது விபத்து என்ற பெயரில் நடைபெறும் கொலைகள் மட்டும் எப்படிக் குறையும்!

அரசாங்கப் பள்ளியில் கல்வித் தரம் கேவலமாய் உள்ளது என்று தானே, பெற்றவர்கள் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என் பிள்ளைக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று தனியாரைத் நாடி  வருகிறர்கள். அய்யா!  தனியார் பள்ளிகளே அந்த அன்றாடக் கூலிகளின் கனவில் மண்வாரிப் போட்டு விடாதீர்கள். பள்ளிகள் குழந்தைகளின் வாழ்வாதாரம்  அவர்களே நாட்டின் எதிர்காலம் என்பது படிக்காத மேதை கர்மவீரர் அவர்களின் கூற்று, உம்  போன்ற படித்த முட்டாள்களுக்கு இது தெரியாமல் போனது  கேவலமாய் உள்ளது. கோடிக் கணக்காய்  செலவு செய்து பள்ளி ஆரம்பித்து போட்ட பணத்தை எடுக்கக் கற்றுக் கொண்ட உங்களைச் சொல்லி குற்றமில்லை, கல்வியைக் கொண்டு பணம் செய்யும் நிலைக்கு உங்களைத் தள்ளி அதை வேடிக்கை பார்க்கிறதே  அரசாங்கம் அவர்கள் தான் இது போன்ற அவலங்களுக்கு முழுக் காரணம்.

வரவென்று டாஸ்மாக்கை எடுத்து நடத்தும் அரசாங்கத்திற்கு செலவென்று கல்வியை எடுத்து நடத்தமுடியாமல் போனது கையாலாகத் தனமில்லாமல் வேறு என்னவாகக் கருத முடியும்?  பத்து மாதங்கள் சுமந்து பெற்ற தாயின் முன்னால் அவள் குழந்தையின் பிணமும் சில லட்சம் பணமும் வைத்தால் என்ன மன நிலை இருக்குமோ அந்த நிலைக்குத்தான் இந்நாட்டில் பலரும் தள்ளப்படுகிறார்கள், கொலைகளை செய்துவிட்டு கவனக் குறைவு விபத்து என்று காரணம் கூறி நிவாரணம் என்ற பெயரில் சில லட்சங்களைத் தரும் அரசாங்கமும் பள்ளி நிர்வாகமும்  இருக்கும் வரை கவனக் குறைவால் விபத்து என்ற பெயரில் நடைபெறும் கொலைகளும் நிற்கப் போவது இல்லை என்பது தான் உண்மை!

Tuesday, 21 February 2012

பாசம் மட்டும் வாழ்ந்தெதற்க்கு

“பூப் போன்ற கனவேந்தி,
வளர்த்த பைங்கிளி காண்!
புவிக்கு பாரமென்ற
புள்ளியோடு கோலமாய் !
பள்ளிக்குப் பத்திரமாய் ;
அனுப்பிவைத்துக் காத்திருந்து,
பாசமகள் வருமட்டும்
மடியில் நெருப்போடு,
வழிமேல் விழிவைத்து, வரும்வரை
வேர்த்திருந்து  கண்ணின் கண்மணியாய்,
வளர்த்த அன்பு மகள் ...!
பூப்பெய்தி மலராக,
இணைதேடும் நாடகங்கள்,
தினந்தோறும் அரங்கேற்றம்,
இல்லாதார் வாழ்வினிலே!
ஏழைகளின் எள்ளுருண்டை,
எட்டிக்காய் ஆகிறது!!! ..
பொன்னில்லா பெண்ணிங்கு;
குப்பை மேட்டு கூரையாய்!
இருப்பவன் கொண்ட பசிக்கு
இல்லாதார் இரையாவார் ...
இன்றில்லை; நாளை விடியும்,
கனவோடு காத்திருக்கும்,
வாழ்வில் விடியலலுண்டோ?
இறைவா நீயெங்கே!
பாதையும் சரியில்லை,
பணமும் கையில் இல்லை,
பாசம் மட்டும் வாழ்ந்தெதற்க்கு,
பாவம் வாழும் உலகினிலே!
 விடையில்லா கேள்வியாய்....!
எச்சிலைக்கே போராட்டம்!!
ஏழைகள் வாழ்வினிலே,
எல்லாம் கனவுகளே!

 சிலைகிருக்கும் மரியாதை,
உயிர்க்கு இங்கே இல்லையடா!
சிந்தித்தால் மரணமொன்றே,
இல்லார்க்கு சொர்கமடா!!
வழியுமில்லை ஒளியுமில்லை,
 பெண்ஜென்மம் பாவமடா!
விடியல்பேசும் வித்தகரே,
 எதுவும் தேவையில்லை,
நிம்மதி தேடுகிறோம்,
 வாழவிட்டால் அதுபோதும் !